பிரதமரை வரவேற்கும் லிஸ்டில் அண்ணாமலை பெயர் கொடுக்கப்பட்டிருந்தது,அவர்தான் வரவில்லை என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 29) கேரளாவில் நடைபெறும தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். முன்னதாக டெல்லியில் இருந்து இன்று பிற்பகல் 2 மணியளவில் பிரதமர் கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ,தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் , இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி ஆகியோர் பிரதமரை வரவேற்றனர்.
பின்னர் அவர் ஹெலிகாப்டர் மூலம் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்திற்கு பிரச்சாரத்திற்கு கிளம்பிச் சென்றார்.
இந்நிலையில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று கோவை வீட்டில் இருந்தும் பிரதமர் வரவேற்பு நிகழ்வில் பங்கேற்கவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து பிரதமரை வரவேற்கும் நிகழ்வில் பங்கேற்ற பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, “நான் வந்தவுடன் அண்ணாமலை எப்பொழுது வருகிறார் என கேட்டேன். லிஸ்டில் அவரது பெயர் கொடுக்கப்பட்டிருந்தது,அவர் தான் வரவில்லை என்று சொன்னார்கள் எனக்கூறிய அவர்,
அது என்னவென்று கேட்கிறேன்” என தெரிவித்தார்.
முன்னதாக அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் கோவை வடக்கு தொகுதி மட்டும் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் அண்ணாமலை அதிருப்தியில் இருப்பதாகவும், தேர்தலில் போட்டியிட போவது இல்லை என தலைமையிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
