முதல்வர் ஸ்டாலின் படத்துடன் ஆளுநரிடம் மாணவர் ஒருவர் பட்டம் பெற்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்ளவில்லை. அதற்கு முன்னதாக ஆளுநர் ரவி, உரையை வாசிக்காமல் சட்டமன்றத்திலிருந்து வெளியேறினார்.
அதுபோன்று ஆளுநர் வழங்கும் பட்டமளிப்பு விழாவில், தமிழக உயர்க்கல்வித் துறை அமைச்சர் பங்கேற்காமல் புறக்கணித்த நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளன.
இப்படி ஆளுநருக்கும் அரசுக்கு இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், அண்ணாமலை பல்கலை கழக மாணவர் ஆளுநரிடம் இருந்து பட்டம் வாங்கும் போது முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்தை இணைத்து பெற்றுள்ளார்.
அண்ணாமலை பல்கலை கழகத்தில் இன்று (பிப்ரவரி 2) 87ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
அப்போது மாணவர் புஷ்பராஜ், முதல்வர் ஸ்டாலின் படத்தை இணைத்து ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பட்டம் பெற்றதால் சலசலப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அடுத்தடுத்து பட்டம் வாங்க நின்ற மாணவர்கள் முழு சோதனைக்குப் பிறகே மேடை ஏறி பட்டம் வாங்க அனுமதிக்கப்பட்டனர்.
தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநருக்குப் பதிலாக முதலமைச்சரை நியமிக்கும் மசோதா, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் 2025 ஏப்ரலில் ஒப்புதல் பெறப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மூலம் முதல்வரே வேந்தராகிறார். இந்தசூழலில் மாணவர் புஷ்பராஜ் முதல்வர் ஸ்டாலின் படத்தை இணைத்து பட்டம் பெற்றுள்ளார்.
முன்னதாக 2025ஆம் ஆண்டு, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ரவியிடம் பட்டம் பெற மறுப்பு தெரிவித்த நாகர்கோவிலை சேர்ந்த ஜீன் ஜோசப் என்ற மாணவி, துணைவேந்தர் என்.சந்திரசேகரிடம் பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
