விஜய்க்கு நாங்கள் அடைக்கலம் கொடுக்கிறோம் என்று சொல்வது அபத்தம் என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இருந்து தமிழகம் திரும்பிய பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று (அக்டோபர் 6) மதியம் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், “கரூர் விவகாரத்தை பொருத்தவரை தவெக தலைவர் விஜய் முதல் குற்றவாளியாக வழக்கு பதிவு செய்தால் வழக்கு நிற்காது.
ஹைதராபாத்தில் அல்லு அர்ஜுனா வழக்கில் அப்படித்தான் நடந்தது. அரசியல் ஆசைக்காக விஜய்யை கைது செய்யலாம், ஆனால் அடுத்தநாள் 10 மணிக்கு ஜாமீன் கிடைத்து வெளியில் வந்துவிடலாம். இது சின்ன பிள்ளைகள் விளையாடும் விளையாட்டுக்கு சமம்” என்றார்.
மேலும், “அரசு உறுதியாக இருந்தால் யார் தவறு செய்திருக்கிறார்களோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், அதிகாரிகள் முதல் கொண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் அனுமதி வாங்கிய கீழ்மட்ட நிர்வாகிகள் முதல் கொண்டு விசாரிக்க வேண்டும்.
தமிழக வெற்றிக் கழகத்தின் மீது சில தவறுகள் இருக்கிறது. சில விஷயங்கள் அவர்கள் செய்திருக்க வேண்டும். ஆனால் விஜய்யை குற்றவாளியாக மாற்ற வேண்டும் என நினைத்தால் அது முடியாது. அதற்கு வாய்ப்பே இல்லை” என்றார்.
திருமாவுக்கு வயிற்றெரிச்சல்
தொடர்ந்து அவர், “திருமாவளவன் பாராளுமன்ற உறுப்பினர். அவருடைய கட்சியில் இதே போல நடந்திருந்தாலும் அது தவறுதான். திருமாவளவன் அவரது கட்சியில் இருந்து நிறைய பேர் வெளியேறுவதை பார்த்து வயிற்றெரிச்சலில் திடீரென விஜய் மீது தாக்கி பேசுவது, மத்திய அரசை தாக்கி பேசுவதும் நடக்கிறது.
பாஜகவிற்கு தமிழக வெற்றி கழகத்தை, விஜய்யை காப்பாற்ற வேண்டிய கடமை கிடையாது . நியாயத்தை நியாயமாக பேச வேண்டும். ஒரு கட்சி ஆளுங்கட்சியால் நசுக்கப்படும் பொழுது கருத்து சொல்கிறோம்.
தமிழக வெற்றிக் கழகத்தை ஆளுங்கட்சி நசுக்க பார்க்கிறது, அதற்கு கருத்து சொல்கிறோம். அதற்காக நாங்கள் அடைக்கலம் கொடுக்கின்றோம் என்பதெல்லாம் சரியானது அல்ல” என்றார்.
ஆதவ் அர்ஜுனா மீது என்ன நடவடிக்கை?
தொடர்ந்து அவர், தமிழக அரசு பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையிலேயே நடவடிக்கை எடுக்கவில்லை. தவெக நிர்வாகிகள் மீது நடவடிக்கைகள் இல்லை, புரட்சி குறித்து பேசிய ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
ஆனால் பாரதிய ஜனதா கட்சி, தமிழக வெற்றி கழகத்திற்கு அடைக்கலம் கொடுக்கின்றது என்று சொல்வதற்கு திமுகவிற்கு என்ன ரைட்ஸ் இருக்கிறது. தவெக மீது பாஜக அடைக்கலம் கொடுக்கிறது என்று சொல்வது அபத்தமாக இருக்கிறது” என அண்ணாமலை தெரிவித்தார்.