ANNAMALAI ANBU KOOTTAM என்ற பெயரில் விநியோகிக்கப்பட்டு வரும் உறுப்பினர் படிவம், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை ரொம்பவே கொந்தளிக்க வைத்து கொண்டிருக்கிறதாம். Annamalai Anbu Koottam Nainar Nagendran
தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை மாற்றப்பட்ட போதும் தமக்கு தனித்த செல்வாக்கு தொடர்ந்து இருப்பதை சமூக வலைதளங்கள் மூலமாகவும் பாஜக பொதுக்கூட்டங்களில் தமது பெயரை உச்சரிக்கும் போது எழும் ஆரவாரங்கள் மூலமும் காட்டி வருகிறார். அண்ணாமலையின் ஆதரவாளர்கள் ‘ANNAMALAI ANBU KOOTTAM’ என்ற பெயரில் வாட்ஸ் அப் குரூப்பாகவும் ஃபேஸ்புக், ட்விட்டரிலும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

ANNAMALAI ANBU KOOTTAM என்பது முழுமையாக அண்ணாமலையை புரமோட் செய்கிற பணியை மட்டும்தான் செய்து வருகிறது. தற்போது சமூக வலைதளங்களில் ANNAMALAI ANBU KOOTTAM – MEMBERSHIP FORM என்ற உறுப்பினர் சேர்க்கை படிவம் ஒன்று வைரலாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
பாஜகவின் கட்சி வண்ணத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த உறுப்பினர் படிவத்தில் ஒருவரைப் பற்றிய தகவல்கள் மட்டும் இடம் பெறாமல் மாத வருமானம், ஆதார்- பான் கார்டு விவரங்கள், சட்டமன்றம்- மக்களவை தொகுதி விவரங்களுடன் ‘பூத் நம்பரும்’ கேட்கப்பட்டுள்ளது. இந்த உறுப்பினர் படிவம்தான் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை ரொம்பவே கோபப்பட வைத்துள்ளதாம்.
இந்த உறுப்பினர் படிவம் தொடர்பாக ANNAMALAI ANBU KOOTTAM’ கொடுத்துள்ள தொலைபேசி எண்ணில் நாம் பேசினோம். நாம் தொடர்பு கொண்ட போது, போனை எடுத்தவர் தம்மை கேரளாவை சேர்ந்த ஷாஜன் என்றும் டெல்லியில் இருப்பதாகவும் கூறினார்.
அவரிடம் ANNAMALAI ANBU KOOTTAM கூட்டம் குறித்து கேட்ட போது, இது அண்ணாமலை சாருக்கான ரசிகர் மன்றம் சார். இது கவர்ன்மென்ட்டில் பதிவு செய்யப்பட்ட NGO சார்.. அண்ணாமலை சார் மீது அன்பு வைத்து செய்கிறோம்.. எப்படி விஜய் ஃபேன்ஸ் இருக்காங்களோ அதேபோல அண்ணாமலை சாருக்கு நாங்க பேன்ஸ்..
டெல்லிக்கு வரும் தமிழர்களுக்கு உதவி செய்வோம்.. இங்க கல்வி, வேலைக்குன்னு நிறைய பேரு வர்றாங்க.. அவங்களுக்கு நாங்க உதவி செஞ்சுகிட்டு இருக்கோம்.. டெல்லியில் நாங்க 180 பேர் இந்த குரூப்பில் இருக்கிறோம்.
பாஜகவுக்கும் ANNAMALAI ANBU KOOTTAM என்கிற இந்த அமைப்புக்கும் எந்த சம்பந்தமுமே இல்லை. அண்ணாமலை சார் பிறந்த நாளை கூட ரொம்ப சிறப்பாக கொண்டாடுனோம்.. தமிழ்நாட்டைச் சேர்ந்த பழனிவேல் என்பவரும் எங்க கூடத்தான் இருக்கிறார்.. இந்த உறுப்பினர் படிவத்தை இப்ப டெல்லியில் கொடுத்துகிட்டு இருக்கோம்.. சீக்கிரமாக தமிழ்நாட்டுக்கு வருவோம் என்றார் உற்சாகமாக.
ANNAMALAI ANBU KOOTTAM குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கட்சியினர் பேசியிருக்கின்றனர், அப்போது, “என்னதான் டெல்லியில் நாம சொன்னாலும் அண்ணாமலை மீது நடவடிக்கை எல்லாம் எடுக்க மாட்டாங்க.. மாநில நிர்வாகிகள் பட்டியலை கொண்டு போய் நானே கொடுத்தேன்..அவர் வாங்க மாட்டேன் சொன்னாரு.. அவருடைய டெல்லி செல்வாக்கு அப்படியேதான் இருக்கு.. நாம என்ன செய்ய முடியும்? என ஆதங்கப்பட்டாராம் நயினார் நாகேந்திரன்.