பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அன்புமணி ஆதரவாளர்களை ராமதாஸ் கட்சியில் இருந்து நீக்குவதும், பதிலுக்கு ராமதாஸ் ஆதரவாளர்களை அன்புமணி நீக்குவதுமான போக்கு தொடர்கிறது.
இந்தநிலையில், ராமதாஸ் ஆதரவாளரான பாமக சட்டமன்ற உறுப்பினருமான அருளை கட்சியில் இருந்து நீக்கி பாமக தலைவர் அன்புமணி இன்று உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“சேலம் மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாமக சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினர் அருள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் வகையிலும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
அண்மைக்காலங்களில் கட்சித் தலைமை குறித்து செய்தித் தொலைக்காட்சிகள் உள்ளிட்ட முதன்மை ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் அவதூறான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
இது குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைக் குழு, இது குறித்து விசாரித்து வந்த நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் வகையிலான நடவடிக்கைகளுக்காக கட்சித் தலைமையிடம் 12 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அருளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
ஆனால், அதை அவர் மதிக்கவில்லை. அதைத்தொடர்ந்து கட்சித் தலைமைக்கு ஒழுங்கு நடவடிக்கைக்குழு அளித்த பரிந்துரை அறிக்கையின் அடிப்படையில், பாமக அமைப்புச் சட்ட விதி 30-இன்படி பாமகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் அருள் நீக்கப்படுகிறார். பாமகவினர் எவரும் அவருடன் எந்த வகையிலும் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார். Anbumani removed arul from pmk