வைஃபை ஆன் செய்ததும், ‘இன்னும் எத்தனை காலம்தான் இந்த அக்கப்போர் நீடிக்குமோ’ என பாமகவில் அப்பா- மகன் இடையேயான மோதல் குறித்து பாட்டுப் பாடியபடியே மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது வாட்ஸ் அப். Anbumani Ramadoss tussle negotiating
பாமகவில் டாக்டர் ராமதாஸ், மகன் அன்புமணி இடையேயான மோதல் இன்னமும் முடிவுக்கு வந்தபாடில்லை. இந்த பிரச்சனை தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது.
பாமகவின் உட்கட்சி பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக ஜூன் 5-ந் தேதி பாஜகவின் அதிகார மையமான ஆடிட்டர் குருமூர்த்தி, சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி ஆகியோர் டாக்டர் ராமதாஸை திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு 3 மணிநேரம் நடந்தது.

இச்சந்திப்பின் போது வன்னியர் சங்கம், பாமகவை கட்டமைக்க ஊர் ஊராக எப்படியெல்லாம் பாடுபட்டு உழைத்தேன். எத்தனை எத்தனை எதிர்ப்புகள், போராட்டங்களை சந்தித்தேன் என்பதையெல்லாம் விரிவாக விவரித்தாராம் ராமதாஸ்.
கடைசியாக, “தலைவர் பதவி என்கிட்டதான் இருக்கும். நான்தான் வைத்திருப்பேன். நான் விருப்பப்படும்போதுதான் தருவேன். என் நிலைப்பாடு இதுதான். இதுபற்றி அன்புமணியிடம் கேட்டு சொல்லுங்க ” என ஆடிட்டர் குருமூர்த்தியிடமும் சைதை துரைசாமியிடமும் திட்டவட்டமாக சொன்னாராம் டாக்டர்.
இதனைத் தொடர்ந்து சென்னை திரும்பிய ஆடிட்டர் குருமூர்த்தி, அன்புமணியை தொடர்பு கொண்டு தமது அலுவலகத்தில் வந்து சந்திக்குமாறு சொன்னாராம். ஆடிட்டர் குருமூர்த்தியை நேரில் சந்தித்த அன்புமணி, “பாமக இப்பதான் நல்ல போக்கில் போய்க் கொண்டிருக்கிறது. கட்சியும் கட்டுக் கோப்பான நிலைக்கு வந்துள்ளது. இந்த நிலைமையில் தலைவர் பதவியை அவரிடம் கொடுத்தால் கெடுத்துவிடுவார். அதனால் தலைவர் பதவியை விட்டுத் தரவே முடியாது. இதை அவரிடம் தெளிவாக சொல்லிடுங்க” என உறுதியான குரலில் பேசினாராம்.
இப்படியான சந்திப்புகளைத் தொடர்ந்து சென்னை வந்த டாக்டர் ராமதாஸ், அடுத்தடுத்து பலரையும் சந்தித்து பேசி வருகிறார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ஏகே மூர்த்தியின் வீட்டில் ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் சைதை துரைசாமியை மீண்டும் டாக்டர் ராமதாஸ் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போதும் கூட, “தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்குதான் மகன். தந்தை எதிர்பார்ப்பதை மகன்தான் செய்ய வேண்டும்” என சென்டிமென்ட்டாகவும் பேசினாராம் டாக்டர்.
இந்த சந்திப்புக்குப் பின்னர்தான் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், “அரசியல்வாதிகள் அரசியல் செய்வதற்கு வயது இல்லை. கலைஞர், சக்கரநாற்காலியில் அமர்ந்துதான் முதலமைச்சராக செயல்பட்டார். மலேசியாவின் மகாதீர், 92 வயதில் பிரதமரானார். வயது என்பது வெறும் எண் மட்டும்தான்” என கூறினார்.
பாமகவில் அப்பா- மகன் இடையே இப்படி மோதல் நீண்டு கொண்டே போகும் நிலையில், இருவரிடையே சமாதானப் பேச்சுவார்த்தை நடத்திய ராமதாஸ் மகள் ஶ்ரீகாந்தி, “என் மகன் முகுந்தனுக்கு கூட கட்சியில முக்கியப் பதவி கொடுக்கனும் என்பதெல்லாம் கூட அப்புறமாக பார்க்கலாம். முதலில் அய்யாவும் தம்பியும் சமாதானமாகப் போகனும். அதுதான் இப்போதைக்கு நல்லது” என்று ஆதங்கப்படுவதாக டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆஃப் லைனுக்கு போனது வாட்ஸ் அப். Anbumani Ramadoss tussle negotiating