காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி ப.உ.செம்மல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது அநீதியானது என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியாக பணியாற்றி வந்த ப.உ. செம்மல் அவருக்குரிய அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தியதான குற்றச்சாட்டின் அடிப்படையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மாவட்ட நீதிபதி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து அவரிடம் எந்த விளக்கமும் கேட்காமல் அவரை பணி நீக்கியிருப்பது அநீதியானது ஆகும்.
நீதி வழங்கும் முறையின் அடிப்படையே எந்தக் குற்றச்சாட்டாக இருந்தாலும் இரு தரப்பையும் விசாரித்து நீதி வழங்குவது தான். ஆனால், மாவட்ட நீதிபதி ப.உ.செம்மல் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அவர் தரப்பு நியாயத்தையும், விளக்கத்தையும் கோராமல் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது நீதிக்கு தண்டனையாக அமைந்து விடும்.
எனவே, அவர் மீதான பணி நீக்க நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். அவர் வழக்கம் போலவே மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியாக கடமை ஆற்றுவதை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
