மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு இன்று (ஜூன் 8) வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து மனமுருகி வேண்டினார்.
மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் மற்றும் பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று இரவு தனி விமானம் மதுரை வந்தடைந்தார். அவருக்கு கட்சித் தலைவர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். amitshah offered puja at the Meenakshi Temple

தொடர்ந்து மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு இன்று காலை 11 மணிக்கு வருகை தந்தார். அவரது வருகையையொட்டி 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், ஒரு மணி நேரம் முன்னதாக கோயிலுக்குள் செல்ல பக்தர்களுக்கு அனுமதி நிறுத்தப்பட்டது.
கோயிலுக்கு வருகை தந்த அமித் ஷாவிற்கு மதுரை ஆதீனம் சால்வை அணிவித்து வரவேற்று புத்தகம் மற்றும் மனுவை வழங்கினார். தொடர்ந்து கோயில் நிர்வாகிகள் பூரண கும்ப மரியாதையுடன் சிறப்பான முறையில் வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து கோவிலில் நடைபெற்ற மத்திய கால பூஜையில் கலந்துகொண்டு சுவாமி மற்றும் மீனாட்சியம்மனை தரிசனம் செய்தார். அவருடன் பாஜக மத்திய இணையமைச்சர் எல். முருகன், பாஜக தமிழக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோரும் பூஜையில் பங்கேற்று அம்மனை தரிசித்தனர்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில், ”மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று பூஜை செய்ததில் மகிழ்ச்சி. நாட்டின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கும், நமது குடிமக்களின் நல்வாழ்விற்கும் அன்னையின் ஆசிகளைப் பெற்று பிரார்த்தனை செய்தேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் அங்கிருந்து தான் தங்கியிருக்கும் தனியார் ஹோட்டலில் உயர்மட்ட கட்சி நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க புறப்பட்டு சென்றார்.
அதன்பின்னர் மதுரை ஒத்தக்கடை பகுதியில் உள்ள வேலம்மாள் மைதானத்தில் பிற்பகல் 3.30 மணியளவில் நடைபெறும் அந்தக் கட்சி நிா்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளார்.