மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையால் மதுரையில் இன்றும் நாளையும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. Amit Shah’s Visit: Drone Flights Banned in Madurai Today and Tomorrow!
மத்திய அமைச்சர் அமித்ஷா, மதுரையில் நடைபெறும் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் நாளை பங்கேற்க உள்ளார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று இரவு 8.20 மணிக்கு மதுரைக்கு வருகை தருகிறார்; பின்னர் சிந்தாமணி பகுதியில் உள்ள ஹோட்டலில் தங்குகிறார் அமித்ஷா.
மேலும் பாஜகவின் கூட்டணி கட்சித் தலைவர்களையும் அமித்ஷா மதுரையில் சந்தித்து பேச இருக்கிறார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு ஓராண்டு இருக்கும் நிலையில் அமித்ஷா பங்கேற்கும் இந்த ஆலோசனைக் கூட்டம் மிக முக்கியமானதாகவும் பார்க்கப்படுகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நாளை முற்பகல் 11 மணிக்கு தரிசனம் செய்யும் அமித்ஷா, பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
பாஜகவின் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்கும் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்று உரையாற்றுகிறார்.
இந்த நிலையில் அமித்ஷாவின் மதுரை வருகையை ஒட்டி, மதுரையில் இன்றும் நாளையும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகரில் விமானம் நிலையம் தொடங்கி முக்கியமான இடங்களில் 5 அடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.