வாக்குத் திருட்டு போல திருக்குறளை வைத்து தமிழர் ஓட்டுகளை திருட முடியாது என அமித் ஷாவுக்கு பதில் அளித்துள்ளார் திமுக எம்.பி ஆ.ராசா.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் பாஜக பூத் கமிட்டி மாநாடு நெல்லை தச்சநல்லூரில் இன்று (ஆகஸ்ட் 22) நடைபெற்றது.
அப்போது, திருக்குறள் வழிநின்று பிரதமர் மோடி ஆட்சி செய்வதாக கூறிய அமித் ஷா, “சோனியா காந்தி தனது மகன் ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்று நினைக்கிறார். அதுபோன்று தமிழகத்தில் ஸ்டாலின் தனது மகன் முதல்வராக வேண்டும் என்று நினைக்கிறார். இவர்கள் இருவருக்கும் இது ஒன்றுதான் அஜெண்டா. ஆனால் இது நடக்காது” எனத் தெரிவித்தார்.
அவரது பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக எம்.பி. ஆ.ராசா பேசுகையில், “ஜி.எஸ்.டி என்ற கொடிய வரியை வசூலித்து மக்களை வஞ்சிக்கும் அமித்ஷாவுக்கு, திருக்குறளையும் திருவள்ளுவரையும் பற்றி பேச தகுதி இல்லை.
துணை முதல்வர் உதயநிதியை பார்த்து அமித்ஷாவுக்கு பயம் வந்துவிட்டது போல. 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக – அதிமுக கூட்டணிக்கு அவர் சமாதி கட்டுவார். எங்களுக்கான முதல்வர் அறிவாலயத்தில் இருந்து வருவார். அதிமுக, பாஜக கூட்டணிக்கு நாக்பூரில் இருந்து தான் வருவார்கள். வாக்குத் திருட்டு போல திருக்குறளை வைத்து தமிழர் ஓட்டுகளை திருட முடியாது.
அமித் ஷாவின் மகன் ஜெய்ஷா எப்படி இந்திய கிரிக்கெட் வாரியத்திற்குச் செயலாளர் ஆனார்? அவருடைய கிரிக்கெட் அறிவு என்ன? அவரை ஓட்டுப் போட்டா தேர்ந்தெடுத்தார்கள்?
மக்கள் வாக்களித்தால் யாரும் முதலமைச்சர் ஆகலாம். தமிழ்நாட்டில் யார் முதலமைச்சராக வேண்டும் என்பதை அமித்ஷா முடிவு செய்ய முடியாது.
மோடியின் அமைச்சரவையில் 39 சதவிகிதம் பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள் தான். அவர்கள் மீது இந்த சட்டப்பிரிவு பாயுமா? வழக்கம் போலவே அரைத்த மாவையே அரைத்திருக்கிறார் அமித்ஷா. அமித்ஷாவின் உருட்டல் மிரட்டல்களுக்கு எல்லாம் அஞ்சி நடுங்க இது தொடை நடுங்கி பழனிசாமி ஆட்சி அல்ல” என ஆ.ராசா பேசியுள்ளார்.