“வந்தாரை வாழ வைக்கும் நாடு” என்று நாம் பெருமைப்படுவோம். ஆனால், வந்த விருந்தாளி நம்மையே “நீங்கள் எல்லாம் சோம்பேறிகள்; அதான் தொப்பை போடுது,” என்று முகத்திற்கு நேராகச் சொன்னால் எப்படி இருக்கும்?
அப்படி ஒரு சம்பவம்தான் இப்போது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்துள்ளது. சார்லி எவன்ஸ் (Charlie Evans) என்ற அமெரிக்கச் சுற்றுலாப் பயணி வெளியிட்ட ஒரு இன்ஸ்டாகிராம் வீடியோ, ஒட்டுமொத்த இந்திய இணையவாசிகள் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடந்தது என்ன? ஜெய்ப்பூரில் உள்ள புகழ்பெற்ற ஆம்பர் கோட்டைக்கு (Amber Fort) சார்லி எவன்ஸ் சென்றுள்ளார். இந்தக் கோட்டைக்குச் செல்ல செங்குத்தான மலைப்பாதையில் நடந்து செல்ல வேண்டும்.
- சார்லி அந்தப் பாதையில் நடந்து செல்லும்போது, பல இந்தியர்கள் பாதியிலேயே மூச்சு வாங்கியபடி உட்கார்ந்திருப்பதையும், சிலர் “இன்னும் எவ்வளவு தூரம்?” என்று அவரிடம் கேட்பதையும் பார்த்துள்ளார்.
- உடனே தனது கேமராவை ஆன் செய்த அவர், “இப்போதான் புரியுது… இந்தியர்கள் ஏன் ஃபிட்னஸ் இல்லாமல் (Out of shape) இருக்கிறார்கள் என்று! இவர்கள் சோம்பேறிகள் (Lazy). காசு கொடுத்து டிக்கெட் வாங்கியும், உச்சிக்குச் செல்லாமல் பாதியிலேயே டீ குடித்துக்கொண்டும், சிகரெட் பிடித்துக்கொண்டும் அமர்ந்திருக்கிறார்கள். இவர்களுக்கு ‘எக்ஸ்ட்ரா மைல்’ (Extra Mile) செல்லும் மனதிடமே இல்லை,” என்று அந்த வீடியோவில் விமர்சித்துள்ளார்.
கொதித்தெழுந்த நெட்டிசன்கள்: இந்த வீடியோ வைரலானதும், இந்தியர்கள் பலரும் சார்லிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
- “கோவில்னு சொல்லிப் பாரு!” ஒரு பயனர் கிண்டலாக, “தம்பி சார்லி, அங்கே மேலே ஒரு கோவில் இருக்குன்னு மட்டும் சொல்லிப் பாரு… இந்தியர்கள் எப்படி ஓடுறாங்கன்னு தெரியும்! எங்களுக்குப் பக்திதான் முக்கியம், ட்ரெக்கிங் (Trekking) இல்ல,” என்று பதிலடி கொடுத்துள்ளார்.
- “நாங்க பிக்னிக் வந்திருக்கோம்!” “நாங்கள் விடுமுறையைக் கொண்டாடவும், குடும்பத்தோடு அரட்டையடிக்கவும்தான் வருகிறோம். உங்களைப் போல மூச்சு முட்ட மேலே ஏறி சாதனை படைக்க வரவில்லை. அந்தப் பயணத்தை ரசிப்பதுதான் எங்கள் பாணி,” என்று சிலர் கூறியுள்ளனர்.
- “எல்லாரையும் எடை போடாதே!” “ஒரு கோட்டையில் பார்த்த சிலரை வைத்துக்கொண்டு, 140 கோடி இந்தியர்களையும் சோம்பேறிகள் என்று முத்திரை குத்தாதீர்கள். அதிகாலை 5 மணிக்கு எழுந்து பாருங்கள், எத்தனையோ பேர் ஜிம்மிலும், மைதானத்திலும் வியர்வை சிந்துவது தெரியும்,” என்று பலர் ஆவேசப்பட்டுள்ளனர்.
ஆதரவுக் குரல்கள்: அதே சமயம், “அவர் சொல்வதிலும் உண்மை இருக்கிறது,” என்று சில இந்தியர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். “நம்மிடம் உடற்பயிற்சி கலாச்சாரம் குறைவுதான். 10 நிமிடம் நடக்கவே நாம் யோசிக்கிறோம்,” என்ற சுயவிமர்சனங்களும் எழுந்துள்ளன.
முடிவு: ஒருவர் ‘ஃபிட்னஸ்’க்காக நடக்கிறார்; இன்னொருவர் ‘ரிலாக்ஸ்’ பண்ண நடக்கிறார். இரண்டுமே தவறில்லை. ஆனால், ஒரு நாட்டின் கலாச்சாரத்தையும், பழக்கவழக்கத்தையும் முழுமையாகப் புரிந்துகொள்ளாமல், “சோம்பேறிகள்” என்று முத்திரை குத்துவதுதான் தவறு.
சார்லி சார்… அடுத்த முறை வரும்போது எங்க ஊரு ‘திருவண்ணாமலை கிரிவலத்தைப்’ பாருங்க… அப்போ தெரியும் எங்க ஸ்டாமினா என்னன்னு!
