திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 5 போலீசாரின் குடும்பத்தினர் இன்று போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தைச் சேர்ந்த கோவில் காவலாளி அஜித்குமார், திருப்புவனம் போலீசார் நடத்திய விசாரணையில் தாக்கப்பட்டு உயிரிழந்தார். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் 5 போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கில், போலீசார் மீது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். Ajithkumar Families of Arrested Cops
இந்த நிலையில் அஜித்குமார் மரண வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 5 போலீசாரின் குடும்பத்தினர் இன்று திருப்புவனத்தில் போராட்டம் நடத்தினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய போலீசார் குடும்பத்தினர், “அஜித்குமாருக்கும் கைது செய்யப்பட்ட போலீசாருக்கும் தனிப்பட்ட பிரச்சனை எதுவும் இல்லை. மேலதிகாரிகள் உத்தரவிட்டதால்தான் இந்த விசாரணை நடத்தப்பட்டது. ஆகையால் எங்களுக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும். இப்ப போலீஸ்காரர்களின் குடும்பத்தின் நிலைமை என்னவாகும்? போலீஸ்காரர்களுக்கே இந்த நிலைமையா? அஜித்குமார் என்ற ஒருவருக்கு நியாயம் வாங்கி கொடுத்தீங்களே.. பாதிக்கப்பட்டுள்ள போலீஸ்காரர் குடும்பங்களுக்கும் நியாயம் வாங்கிக் கொடுங்க” என கதறலுடன் தெரிவித்தனர்.