நடிகர் அஜித்குமார் ரசிகர்களிடம், ‘மானமே போகுது’ என வேதனையுடன் கடிந்துகொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய் அரசியலில் தீவிரமாக இயங்கி வருவது போல நடிகர் அஜித் குமார் கார் ரேஸில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
பல்வேறு நாடுகளுக்கும் சென்று கார் பந்தயத்தில் பங்கேற்று வருகிறார். தற்போது துபாயில் நடைபெறும் கார் பந்தயத்துக்காக அங்கு தங்கியிருந்து பயிற்சி எடுத்து வருகிறார்.
இந்தசூழலில் துபாயில் இருக்கும் அஜித் ரசிகர்கள், தினமும் அவரை பார்ப்பதற்காக பயிற்சி நடக்கும் இடத்துக்கு சென்று நீண்ட வரிசையில் நிற்கின்றனர்.
இதனால் அஜித்குமார் பயிற்சி முடிந்த பின்னரோ அல்லது ஓய்வில் இருக்கும் போதோ ரசிகர்களைச் சந்தித்து செல்பி எடுத்து வருகிறார்.
இந்தசூழலில் அஜித்குமார் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், “நம்ம மானமே போகுது, தயவு செய்து ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள். இது தியேட்டர் கிடையாது” என்று கடிந்து கொள்கிறார்.
என்ன நடந்தது?
அபுதாபியில் நடைபெற்ற ‘ஏசியன் லெமன்ஸ்’கார் பந்தயத்தில் பங்கேற்ற அஜித்தை காண்பதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தில் திரண்டனர். ஒரு கட்டத்தில் ரசிகர்கள் அஜித்தைச் சூழ்ந்துகொண்டு செல்ஃபி எடுக்கவும், கூச்சலிடவும் செய்துள்ளனர்.
சிலர் மது அருந்திவிட்டு வந்து கூச்சலிட்டதாகவும், அஜித்தின் ரேஸ் கார் மீது சாய்ந்தபடி செல்ஃபி எடுக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.
சர்வதேச அரங்கில் மற்ற நாட்டு வீரர்களும், அதிகாரிகளும் இருக்கும் இடத்தில் ரசிகர்களின் ஒழுங்கற்ற செயல் அஜித்துக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதேசமயம், ரேஸ் டிராக்கில் ரசிகர்களின் அத்துமீறல்கள் தொடர்ந்தால், அது அஜித்தின் ‘ஏகே மோட்டார் ரேசிங்’ அணிக்கு சர்வதேச விதிகள் படி அபராதம் விதிக்கப்படவும், போட்டியில் இருந்து நீக்கப்படவும் வாய்ப்புள்ளது. என்வே தான் அஜித் ரசிகர்களிடம் கோபத்துடன் பேசியுள்ளார்.
