அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா போயிங் 787 விமானத்தின் கருப்புப்
பெட்டியில் இருந்து தரவை மீட்டெடுப்பதற்காக அது அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. air india ai171 black box send to usa
குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் விமானம் கடந்த 12ஆம் விபத்தில் சிக்கி சிதறியது. இதில் மொத்தம் பயணிகள், விமான ஊழியர்கள் மற்றும் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் என 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதனையடுத்து விமான விபத்து குறித்த விசாரணையை டிஜிசிஏ தீவிரப்படுத்தியது. அதன்படி விபத்துக்கான காரணம் குறித்து கண்டறிவதில் முக்கிய பங்கு வகிக்கும் கருப்புப் பெட்டி விபத்து நடைபெற்ற இரண்டு நாட்களுக்கு பின் மீட்கப்பட்டது.
எனினும் மோசமாக சேதமடைந்துள்ள ரெக்கார்டர்களில் இருந்து தரவுகளைப் பிரித்தெடுக்க டெல்லியில் உள்ள இந்தியாவின் விமான விபத்து புலனாய்வு பணியகத்தில் (AAIB) சரியான உபகரணங்கள் இல்லை. எனவே அதிலிருந்து தரவை மீட்டெடுப்பது சாத்தியமற்றது என்ற என இந்திய நிபுணர்கள் தெரிவித்த நிலையில், அது அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்திற்கு (NTSB) அனுப்பபட்டுள்ளது.
அங்கு அதிநவீன தொழில்நுட்ப உதவியுடன் டிஜிட்டல் விமான தரவு ரெக்கார்டரிலிருந்து (DFDR) தரவை அணுகி, அதனை இந்தியாவுடன் அமெரிக்காவின் என்டிஎஸ்பி பகிர்ந்து கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கருப்புப் பெட்டியில் இருந்து தான் விமானத் தரவு ரெக்கார்டர் பொதுவாக உயரம், விமானத்தின் வேகம், நேரம் மற்றும் விமானிகளின் உரையாடல் போன்ற விமானத்தின் போது ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல்களை அறிய முடியும்.
தற்போது கருப்புப் பெட்டிக்கு ஏற்பட்ட சேதத்தின் அளவைப் பொறுத்து, தரவைப் பிரித்தெடுக்கும் செயல்முறை இரண்டு நாட்கள் முதல் மாதங்கள் வரை ஆகலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதற்கிடையே, எதிர்காலத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க ஏர் இந்தியாவின் 33 போயிங் 787 ட்ரீம்லைனர் விமானங்களின் கூடுதல் பராமரிப்பு மற்றும் சோதனைகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.