தமிழக சட்டப்பேரவைக்கு நேற்று கறுப்பு பேட்ஜ் அணிந்து வந்ததைப் போல இன்றும் பேட்ஜ் அணிந்து வந்தனர் அதிமுக எம்.எல்.ஏக்கள்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத் தொடரில் நேற்று அதிமுக எம்.எல்.ஏக்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து வந்தனர்.
அதிமுக எம்.எல்.ஏக்களின் கறுப்பு பேட்ஜை பார்த்த சபாநாயகர் அப்பாவு, ” ரத்த கொதிப்புக்காக பேட்ஜ் அணிந்துள்ளீர்களா?” என கேள்வி கேட்டார்.
இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ” கரூர் துயரத்தில் திமுக அரசு அரசியல் செய்வதால் ரத்தக் கொதிப்பு ஏற்பட்டுள்ளது; திமுக அரசின் அலட்சியத்தால் 41 உயிர்களை இழந்த கோபத்தில் ரத்தம் கொதித்துதான் கருப்புப்
பட்டை அணிந்தோம். கரூர் துயரத்தில் பங்கேற்கும் வகையில் கருப்புப் பட்டை அணிந்தால் கிண்டல் செய்யும் தொனியில் சபாநாயகர் பேசியுள்ளார்” என கூறியிருந்தார்.
இந்த நிலையில் இன்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள், “கிட்னிகள் ஜாக்கிரதை” என்ற பேட்ஜ் அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர். நாமக்கல் கிட்னி திருட்டு விவகாரத்தை முன்வைத்து இந்த பேட்ஜை அதிமுக எம்.எல்.ஏக்கள் அணிந்திருந்தனர்.