ஈராக் சதாம் உசேன், லிபியா கடாபி வரிசையில் ஈரான் கொமேனி-க்கு அமெரிக்கா ‘குறி’

Published On:

| By Minnambalam Desk

Iran Us

ஈராக் அதிபர் சதாம் உசேன், லிபியா அதிபர் கடாபி ஆகியோரை இலக்கு வைத்து அழித்த அமெரிக்கா தற்போது ஈரானின் அதி உயர் தலைவர் கொமேனியையும் அழிக்கக் கூடும் என்பதை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மறைமுகமாக எச்சரித்துள்ளார். After Saddam and Gaddafi, Khamenei is Next? U.S. Targets Iran

ஈராக் அதிபராக இருந்த சதாம் உசேன், ரசாயன ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பதாக குற்றம்சாட்டி அமெரிக்கா போர் தொடுத்தது. இந்த போரின் முடிவில் 2003-ம் ஆண்டு பாதாள அறையில் பதுங்கி இருந்த சதாம் உசேன் கைது செய்யப்பட்டார். நீதிமன்ற விசாரணைகளுக்குப் பின்னர் 2006-ம் ஆண்டு சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டார்.

லிபியாவின் அதிபராக இருந்த கடாபி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக இருந்தார். 2011-ல் எகிப்து, துனிசியாவில் அரங்கேற்றப்பட்ட புரட்சிகள் லிபியாவையும் பதம் பார்த்தது. லிபியாவில் உள்நாட்டுப் போர் வெடித்தது. லிபியா அதிபர் கடாபிக்கு எதிரான கிளர்ச்சி குழுக்களுக்கு அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஆயுத உதவி செய்தன. இறுதியில் 2011-ம் ஆண்டு கிளர்ச்சிப் படையினரால் கடாபி சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த வரிசையில் தற்போது அணு ஆயுத தயாரிப்பு விவகாரத்தை முன்வைத்து ஈரானின் அதிஉயர் தலைவரான கொமேனிக்கு அமெரிக்கா குறி வைத்துள்ளது. அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப் தமது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட செய்தி இதனை உறுதிப்படுத்தி இருக்கிறது. டிரம்ப் தமது எக்ஸ் பக்கத்தில், ஈரானின் அதிஉயர் தலைவர் கொமேனி எங்கே மறைந்திருக்கிறார் என்பது எங்களுக்கு தெரியும். அவரை இப்போது நாங்கள் வெளியே கொண்டுவரப் போவது இல்லை (படுகொலை செய்யப் போவது இல்லை); அதனால் ஈரான் உடனே சரணடைய வேண்டும் என எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share