மூக்குத்தி இருக்கிறதா? கம்மல் இருக்கிறதா? என்பது போல், விட்டால் புருஷன் இருக்கிறாரா? என கேள்வி எழுப்புவார்கள் அம்மன் அர்ஜுனன் எம்எல்ஏ பேசி இருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
தமிழகம் முழுவதும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் இன்று (மார்ச் 17) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுக மாநகர் மாவட்ட செயலாளரும், கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான அம்மன் அர்ஜுனன் பேசினார்.தமிழ்நாடு அரசால் ரூ.5000 மகளிர் உரிமைத்தொகை வழங்கியது குறித்து பேசிய அவர், அதை பெறுவதற்கு அரசு நிர்ணயித்துள்ள விதிமுறைகள் குறித்தும் விமர்சித்தார்.
அப்போது மூக்குத்தி இருக்கிறதா? கம்மல் இருக்கிறதா? என்பது போல், விட்டால் புருஷன் இருக்கிறாரா? என கேள்வி எழுப்புவார்கள் என்று முகம் சுழிக்கும் வகையில் பேசி உள்ளார்.
ஏற்கனவே இன்று காலை முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் பேசியது சர்ச்சைக்கு உள்ளான நிலையில், மேலும் ஒரு அதிமுக எம்எல்ஏ சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது.
