ஆள் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராமின் பணியிடை நீக்கம் தொடர வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று (ஜூன் 19) தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, ஏடிஜிபி ஜெயராம் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பின்னர் அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி விடுவித்தனர். adgp suspension to continue
இந்தநிலையில், சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யக்கோரி ஜெயராம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கை நேற்று (ஜூன் 18) விசாரித்த நீதிபதிகள் உஜ்ஜல் புயான், மன்மோகன் அமர்வு, ஜெயராம் சஸ்பெண்ட் செய்யப்பட்டது அதிர்சியளிக்கிறது. இதுதொடர்பாக தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை இன்றைக்கு ஒத்திவைத்தனர்.
இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் உஜ்ஜல் புயான், மன்மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சித்தார்த் தேவ், “ஆள் கடத்தல் வழக்கில் விசாரணை முடியும் வரை ஏடிஜிபியின் சஸ்பெண்ட் தொடர வேண்டும்” என்று தெரிவித்தார்.
அப்போது நீதிபதிகள், “ஏடிஜிபி கைது செய்யப்படவில்லை என்று நேற்று தெரிவித்தீர்கள். அவர் கைது செய்யப்படவில்லை என்றால் எந்த அடிப்படையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்? சஸ்பெண்ட் உத்தரவின் நகல் உங்களிடம் உள்ளதா?” என்று கேள்வி எழுப்பினார்.
வழக்கறிஞர் சித்தார்த் தேவ் சஸ்பெண்ட் உத்தரவை வாசித்தார். தொடர்ந்து, “ஆள் கடத்தல் வழக்கு விசாரணையை விரைவில் முடிக்க வேண்டும். விசாரணை முடிந்த உடன் ஏடிஜிபி சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
நீதிபதிகள், “இந்த விசாரணையை சிஐடிக்கு மாற்ற முடியுமா என்பதை ஆராயுங்கள். வழக்கில் வேறு சில சிக்கல்களும் உள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதால், ஏடிஜிபி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம்” என்று தெரிவித்து வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.