திருப்பரங்குன்றம் உள்ளிட்ட எந்தப் பிரச்சினைக்கும் குரல் கொடுக்காத விஜய், கேரளாவில் கிறிஸ்தவர் தாக்கப்பட்டதற்கு மட்டும் அறிக்கை வெளியிட்டார் என்று நடிகையும் பாஜக நிர்வாகியுமான கஸ்தூரி விமர்சித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் இன்று (பிப்ரவரி 10) செய்தியாளர்களைச் சந்தித்த கஸ்தூரி “திமுக ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டுவிட்டது. குறிப்பாக பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது. சட்டம்-ஒழுங்கு சீர்குலைவை கண்டித்து தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் இன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துகின்றன. கோவை போராட்டத்தில் நான் பங்கேற்கிறேன்.
படிக்கும் மாணவர்கள் மத்தியில் கிரிமினல்கள் புகுந்துவிட்டனர். திமுக அரசு தமிழக மக்களை குடிநோயாளிகளாக மாற்றிவிட்டது. அரசே மதுவுக்கு அடிமையாகிவிட்டது. மது விற்பனையை வைத்தே அரசு இயங்குகிறது. பார் உரிமம் கொடுத்து அதன் மூலம் நிதி திரட்டி கட்சிக்கு நிதி சேகரிக்கின்றனர்.
நம்மைச் சுற்றி நடக்கும் எதையும் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் கடவுளை நோக்கி வழிபடுவோம். அதுபோல முதல்வர் ஜெபம் செய்துகொண்டிருக்கிறார். ‘பெண்கள் எல்லாரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள்’ என்று நினைத்துக்கொண்டிருக்கிறார். தொல்காப்பியர் பூங்காவில் வாக்கிங் செல்லும் முதல்வரை இரவு 9 மணிக்கு மேல் எங்காவது வாக்கிங் போகச் சொல்லுங்கள், பார்க்கலாம்.” என்றார்.
கமலை மட்டும் பாராட்டுவதா?
மேலும், கமலின் பேச்சு சரி என்று சொன்னால், அது அவர்களுக்கும் புரியவில்லை என்று அர்த்தம். அவர் தியாக பிரம்மத்தை அவமானப்படுத்தித்தான் பேசுகிறார். தெலுங்கு மக்களை தவறாகப் பேசினேன் என்று என் மீது வழக்கு போட்டனர். ஆனால் கமலை மட்டும் பாராட்டத் தெரிகிறது.’
பராசக்தி’ படமே ஓடவில்லை, திமுக நாடகம் தமிழகத்தில் அரங்கேறாது என்று நாஞ்சில் சம்பத் பேசியது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, “தவெக சினிமாவை மட்டுமே நம்பியிருக்கிறதா? நாஞ்சில் சம்பத் ஒரு தமிழ் அறிஞர். திமுகவை விமர்சிக்க நிறைய விஷயங்கள் இருக்கின்றன. ஒரு படத்தை வைத்துத்தான் இந்த ஆட்சியை விமர்சிக்க வேண்டும் என்று இல்லை. நாஞ்சில் சம்பத் விமர்சனம் ரசிக்கத்தக்கதாக இல்லை.
குரல் கொடுக்காத விஜய்
மேலும், விஜய் மாநாட்டுக்கு மாநாடு பேசுகிறார், அதே டெம்ப்ளேட்டில்தான் பேசுகிறார். தமிழகத்தில் நடக்கும் எந்தப் பிரச்சினைக்கும் குரல் கொடுக்காதவர். தூய்மைப் பணியாளர், அங்கன்வாடி, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட எந்தப் பிரச்சினைக்கும் குரல் கொடுக்கவில்லை. ஆனால் கேரளாவில் கிறிஸ்தவர் தாக்கப்பட்டதற்கு மட்டும் அறிக்கை கொடுத்தார். தமிழகத்தில் நடக்கும் எந்தப் பிரச்சினைக்கும் குரல் கொடுக்கவில்லை. ஆதவ் அர்ஜுனா பேசும் அளவுக்கு கூட விஜய் பேசுவதில்லை. சைலண்ட்டாக வெற்றி பெறுவது எல்லாம் எம்.ஜி.ஆருடன் முடிந்துவிட்டது.
தவெகவில் விருப்ப மனு வாங்கியிருக்கின்றனர். அந்த மனுவை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். பின்பு போட்டியிட வேண்டும். மனு தாக்கல் ஆக வேண்டும். இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. ஜனநாயகத்தில் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று தெரிவித்தார்.
கங்கனா ரனாவத் படத்திற்கு வந்தது போலவே ‘ஜனநாயகன்’ படத்திற்கும் பிரச்சினை வந்திருக்கிறது. இந்த விவகாரம் நீதிமன்றம் சென்றுவிட்டதால் மத்திய அரசின் கையில் எதுவும் இல்லை என்றும் கஸ்தூரி தெரிவித்தார்.
