விஜய் – த்ரிஷா விவகாரம் குறித்து பேசிய நடிகர் விமல் அந்தக் காரை யார் வைத்திருக்கிறார் அல்லது யார் ஓட்டினார் என்பது என் வேலையா என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
நடிகரும், தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் தொடர்ச்சியாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். கரூரில் நடைபெற்ற கட்சியின் பரப்புரை கூட்டத்தின்போது ஏற்பட்ட விபத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் விஜய் பாதிக்கப்பட்ட குடும்பங்களை கரூர் சென்று சந்திக்காதது விமர்சனத்திற்கு உள்ளானது. இது தொடர்பான வழக்கை தற்போது சிபிஐ (CBI) விசாரித்து வருகிறது. மேலும், விஜயின் கூட்டங்களில் பங்கேற்பவர்கள் தொடர்ச்சியாக அவரின் வாகனத்தை பின்தொடர்ந்து விபத்துகளில் சிக்கி வருவது அக்கட்சியினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், விஜய்க்கு ஒரு நடிகையுடன் தொடர்பு இருப்பதாகவும், அவருடன் வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்வதாகவும், அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாவதாகவும் சங்கீதா குற்றம் சாட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில் நீலாங்கரை வீட்டில் இருந்து உடனடியாக வெளியேற விஜய் வற்புறுத்துவதாகவும் சங்கீதா குற்றம் சாட்டி உள்ளார்.
சமீபத்தில் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், நடிகை த்ரிஷாவுடன் ஒரே நிறத்திலான பட்டாடை அணிந்து, ஒரே காரில் வந்தது அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கிடையில் நேற்று நடைபெற்ற மகளிர் தின நிகழ்ச்சியில் பேசிய விஜய், தன் மீதான விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில், “அவ்வளவு வொர்த் (Worth) இல்லை” என்று தெரிவித்திருந்தார். இது அவரது மனைவி சங்கீதாவைக் குறித்துச் சொல்லப்பட்டதாகக் கருதப்பட்ட நிலையில், சமூக வலைதளங்களில் விஜய்க்கு எதிராகக் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக, தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த ஒரு தரப்பினரே விஜயின் இத்தகைய செயல்பாடுகளை விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.
நடிகர் விமல் பேட்டி
இந்நிலையில், இன்று தஞ்சையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் விமலிடம், விஜயின் வாகனங்களைப் பின்தொடரும் ரசிகர்கள் குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “நடிகர் விஜய் இது குறித்து ஒரு அறிக்கை கூட வெளியிடாத நிலையில் நாம் என்ன செய்ய முடியும்? கும்பல் கூடும் இடங்களில் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அவர் செல்லும் வாகனத்தைப் பின்தொடர்ந்து செல்வதெல்லாம் மிகவும் தவறானது. உங்களுக்குப் பிடித்த நடிகரை மனதிற்குள் வைத்துக்கொள்ளுங்கள். அதற்காகத் துரத்திச் சென்று உயிரைப் பணயம் வைக்க வேண்டிய அவசியம் இல்லை. தயவுசெய்து அப்படிச் செய்யாதீர்கள்.”என்றார்.
தொடர்ந்து விஜய் – த்ரிஷா குறித்த சர்ச்சைக் கேள்விக்கு , “அந்தக் காரை யார் வைத்திருக்கிறார் அல்லது யார் ஓட்டினார் என்பது குறித்துத் தெரிந்துகொள்வது என் வேலையல்ல” என்றார்.
2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகே, விஜயின் அரசியல் எதிர்காலம் மற்றும் அவர் முதலமைச்சராவது குறித்த உண்மை நிலவரம் தெரியவரும்.” என்றும் தெரிவித்துள்ளார்.
