ராஜன் குறை
நடிகர் விஜய் பிற அரசியல் கட்சி தலைவர்கள் போல பத்திரிகையாளர்களை சந்திப்பதில்லை. ஊடகங்களுக்கு நேர்காணல் அளிப்பதில்லை. நாட்டில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளுக்கு, மக்களைப் பாதிக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதில்லை. தன் கருத்துக்களைக் கூறுவதில்லை. அரசியலை மல்டிபிள் சாய்ஸ் குவெஸ்டின் பேப்பர் போல எடுத்துக்கொண்டு அவ்வப்போது ஒரு சில பிரச்சினைகளைப் பற்றி மட்டும் கருத்து தெரிவிக்கிறார். பிற பிரச்சினைகளில் அவர் கருத்துக் கூறவில்லையே என்று விமர்சித்தால், நீங்கள் சொல்வதற்காகவெல்லாம் நான் பேசமுடியாது என்று சிறுபிள்ளைத்தனமாகக் கூறுகிறார்.
அதைவிட மிகப்பெரிய சிக்கல் அவரால் மக்களை இயல்பாகச் சென்று சந்திக்க முடிவதில்லை. அவர் ஒரு ஊருக்குச் செல்வதே பெரியதொரு சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக மாறிவிடுகிறது.காரணம் அவரது நட்சத்திர பிம்பம் கலையாததுதான். அவர் அதைக் கலைக்க விரும்புவதில்லை; ஏனெனில் அதுதான் அவரது முதலீடு என நினைக்கிறார். அரசியல் தலைவராக மாறாமல் சினிமா நட்சத்திரமாகவே அரசியல் செய்ய நினைக்கிறார்.
அவர் நினைத்தால் தொடர்ந்து பொதுவெளியில் பயணம் செய்வதன் மூலம் அவரைக் காண்பது அவ்வளவு அரிதானதல்ல என்ற எண்ணத்தை ஏற்படுத்த முடியும். அப்படி செய்தால்தான் அவரால் இயல்பாக மக்களிடையே பயணம் செய்ய முடியும். ஆனால் அவருக்கு தன்னைக் காண பெருந்திரள் கூடிக் காத்திருக்கிறது என்ற நட்சத்திர மனமயக்கம் தேவைப்படுகிறது. அதிலிருந்து வெளியே வர அவருக்கு இயலவில்லை.
எப்போதாவது பெரிய மேடைகளில் தோன்றி பல ஆயிரம் மக்களிடம் பத்து நிமிடமோ, பதினைந்து நிமிடமோ பேசுகிறார். ஆவேசமான பஞ்ச் டயலாக்குகளை எழுதி வைத்துப் படிக்கிறார். அதைக் கடந்து அவர் மக்களை நேரடியாக சந்தித்துப் பேசும், உரையாடும் வாய்ப்புகள் எதுவுமே இருப்பதில்லை. அப்படி அவர் அபூர்வமாக பொதுவெளியில் தோன்றும் சமயத்தில் அவரது ரசிகர்கள் அவரை நேரில் பார்த்துவிட வேண்டும் என்று கூடுகிறார்கள். கூட்ட நெரிசலிலோ, வெயிலில் வாடியோ உயிரிழக்கிறார்கள்.

விஜயின் கட்சி அமைப்பு என்பதும் தெளிவாக இல்லை. நாலைந்து பேர் மட்டுமே அவருடன் தினசரி தொடர்பில் இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. அவர்கள்தான் கட்சியில் பிற நிர்வாகிகளை சந்தித்துப் பேசுகிறார்கள். அவருக்கு வசனங்களை எழுதிக் கொடுப்பவர், இயக்குபவர் தொழில்முறை அரசியல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி என்பவர் என்று கூறப்படுகிறது. பாண்டிச்சேரியைச் சேர்ந்த புஸ்ஸி ஆனந்த் என்பவர் கட்சியின் பொதுச்செயலாளர். இவர்தான் கட்சி நிர்வாகிகளைச் சந்திக்கிறார். விஜயின் வலதுகரம் எனலாம்.
அதைத்தவிர ஆதவ் அர்ஜுனா என்ற தேர்தல் வியூக வகுப்பாளர் இருக்கிறார். இவரும் பிரபல தொழில்முறை அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரிடம் பணியாற்றியவர்; லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன். அரசியல் தொடர்புகள், செல்வாக்கு மிக்கவர். பிறகு வருமான வரித்துறை பணியை விட்டுவிட்டு வந்துள்ள அருண் ராஜ் என்பவரும் உள்வட்டத்தில் இருக்கிறார். புதிதாகச் சேர்ந்துள்ள மூத்த அரசியல்வாதி செங்கோட்டையன் தினசரி விஜயுடன் தொடர்புகொள்ளும் வாய்ப்புடன் இருக்கிறாரா என்று தெரியவில்லை.
இப்படி ஒரு கட்சியின் தலைவர் தன் எண்ணங்களை பொதுவெளியில் பகிராமல், மக்களுக்கும், கட்சி அணியினருக்கும், ஊடகங்களுக்கும் எட்டாதவராக மன்னராட்சிக் காலத்தில் அந்தப்புரத்திலிருந்து திரைமறைவு ஆட்சி செய்த அரசிகளைப் போல செயல்படுவது மக்களாட்சியை ஏளனம் செய்வதாகவே உள்ளது. கட்சி அணியினருடன் அவருக்கு அன்றாடம் நேரடித் தொடர்பு இல்லையென்றால் அவர்களது செயல்பாடுகளை எப்படி வழிநடத்துவார், எப்படி அவர்களிடமிருந்து அவர் தகவல்களைப் பெறுவார் என்று தெரியவில்லை. அதற்குள்ளாகவே கட்சிக்குள் பல கோஷ்டிப் பூசல்கள், ஊழல் குற்றச்சாட்டுகள் என்று சீரழிவுகள் பெருகியுள்ளன. விஜய்க்கு எந்த அளவு அதெல்லாம் தெரியும் என்பதே மர்மமாகத்தான் இருக்கிறது. ஏனெனில் அவர்தான் பத்திரிகையாளர்களையே சந்திப்பதில்லையே.
இப்படியாக இழிந்து நிற்கும் நடிகர் விஜயின் பக்குவமற்ற, அரசியல் பண்பாடுகளை பாழாக்கும் செயல்பாடுகளை பிற அரசியல் கட்சிகள் கண்டிப்பது தேர்தல் கள முரண் அரசியல் தொடர்பானதாகத்தான் கருதப்படும். மக்களாட்சியின் விழுமியங்களை பாதுகாக்கும் பொறுப்பு குடிமைச் சமூகம் கட்டமைக்கும் பொதுமன்றத்திற்கு உள்ளது. அது உரத்த குரல் எழுப்ப வேண்டும். விஜயை நோக்கி பேசவேண்டும். விமர்சிக்க வேண்டும்.
அரசியல் விமர்சகர்களும், சிந்தனையாளர்களும் ஒருமித்த குரலில் கண்டனங்களை எழுப்ப வேண்டும். இது கட்சி அரசியல் பிரச்சினையல்ல. மக்களாட்சி என்ற அற்புதமான வரலாற்று விளைபொருள் சார்ந்த பிரச்சினை. இப்படியெல்லாம் கூறும்போது சிலர் அப்படியென்ன பெரிய தவறிழைக்கிறார் விஜய் என்று வியப்புக் கூட அடையலாம். அவர் என்ன தவறு செய்கிறார் என்பதை விளக்கவே இந்தக் கட்டுரை.
நான் பொதுவாக தி.மு.க-வை ஆதரித்து எழுதுவதால் அந்தக் கோணத்திலிருந்து விஜயை விமர்சிக்கிறேன் என்று சிலர் அவசரப்பட்டு புரிந்துகொள்ளலாம். அது மிகவும் பிழையான புரிதல் என்பதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, நான் தத்துவார்த்த மானுடவியல் நோக்கில் அரசியலை ஆராய்வதன் பகுதியாகத்தான் தி.மு.க-வை ஆதரிக்கிறேன். இதை ஆங்கிலத்திலும், தமிழிலும் விரிவாக விளக்கி எழுதியுள்ளேன். இரண்டாவது, எதிர்வரும் தேர்தலில் விஜய் தி.மு.க-விற்கு எதிரான வாக்குகளைத்தான் பிரிப்பார் என்பதால் தி.மு.க ஆதரவாளர்கள் அவரைக்குறித்து கவலைப்படத் தேவையில்லை. எனவே என்னுடைய கண்டனம் மக்களாட்சி விழுமியங்களை காப்பது குறித்தது என்பதை விளக்கவே இந்த கட்டுரை.
ஊடகங்கள்தான் (குறிப்பாக தொலைக்காட்சி ஊடகம்) பொதுமன்றத்தை சமூக அளவில் கட்டமைக்கின்றன. ஆனால் ஊடகங்கள் தேர்தல் ஆரூடங்களை சொல்வதுடன் பல சமயங்களில் நின்றுவிடுகின்றன. விஜய்க்கு எவ்வளவு வாக்குகள் கிடைக்கும்? அவர் எந்தக் கட்சியின் வாக்குகளைப் பிரிப்பார்? ஆகிய கேள்விகளுடன் ஊடக அக்கறை நின்றுவிடுகிறது.
ஊடகங்களை விஜய் முற்றிலும் புறக்கணிக்கிறார். பத்திரிகையாளர்கள் சந்திப்பையே முற்றாகத் தவிர்க்கிறார். இது மக்களாட்சிக்கு செய்யப்படும் மிகப்பெரிய அவமானம் என்பதைக் கூட மக்களாட்சியின் நான்காவது தூண் எனப்படும் ஊடகங்கள் உரத்துச் சொல்வதில்லை. ஆங்கில ஊடகங்கள் கூட கண்டிப்பதில்லை. வெட்கமில்லாமல் அவருடன் பேசியவரை நேர்காணல் செய்து வெளியிடுகின்றன. ஒரு நேர்காணலை எதிர்கொள்ள முடியாதவரெல்லாம் முதல்வராக அருகதையுள்ளவரா என்று ஆங்கில ஊடகங்கள் கூட கேட்பதில்லை.
அதற்கு மேல் விஜயின் செயல்பாடுகள் சரியானவையா, நாட்டில் அரசியல் கலாசாரத்தை மேம்படுத்தும் தன்மை கொண்டவையா அல்லது ஒட்டுமொத்தமாக அரசியலை அவமதித்து, சீரழிக்கும் தன்மை கொண்டவையா என்பதை பொதுமன்றம்தான் விவாதிக்க வேண்டும். ஊடகங்களையும் விவாதிக்க நிர்பந்திக்க வேண்டும். சமூக ஊடகங்களில் பலரும் மனம் வெதும்பிப் பதிவிடுகிறார்கள். அவர்களை விஜய் ரசிகர்கள் மிக மோசமாக வசை பாடுகிறார்கள். எந்த நாகரீகமும், தர்க்கமும் அவர்கள் எதிர்வினைகளில் இருப்பதில்லை. இந்தக் கட்டுரையில் நாம் விரிவாக அவர் செயல்பாடுகளின் பிரச்சினை என்னவென்பதை விவாதிப்போம்.

அரசியலில் ஈடுபடுவது என்றால் என்ன?
அரசியலில் ஈடுபடுவது என்றால் மக்கள் பணி செய்வது என்று பொருள். ஏற்கனவே இயங்கி வரும் கட்சியில், இயக்கத்தில் இணைபவர்கள் ஒரு குறிப்பிட்ட ஊரில், அல்லது மாவட்டத்தில் மக்களுக்கும் அந்த கட்சிக்கும், மக்களுக்கும் அரசு நிறுவனங்களுக்கும் இடையில் பாலமாக இருப்பார்கள். மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பார்கள்.
அப்படியில்லாமல் ஒரு புதிய கட்சியை, இயக்கத்தைத் தொடங்குபவர்கள் மக்களை ஒரு சில இலட்சியங்கள், கோரிக்கைகள் அடிப்படையில் அணி திரட்டுவார்கள். வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கைக்காக உருவான வன்னியர் சங்கத்தை பாட்டாளி மக்கள் கட்சியாக மாற்றினார் மருத்துவர் ராமதாஸ். அது ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கான கட்சியாகத் தேங்கிவிடக்கூடாது என்று தலித் எழில்மலையை ஒன்றிய அமைச்சரவையில் இடம்பெறச் செய்தார். ஆனாலும் அவர் நினைத்தபடி அது வெகுஜன கட்சியாகப் பரிணமிக்கவில்லை எனலாம். ஆனால் ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் நலன்களைப் பேசும் கட்சியாக தொடர்ந்தது.
ஒரு சில கட்சிகள் விவசாயிகளை அணிதிரட்டும்; தொழிலாளர்களை அணி திரட்டும்; ஒரு பின்தங்கிய பிரதேசத்தை சார்ந்தவர்களை அணிதிரட்டும். வேறு சில அரசியல் கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கும் அனைத்து மக்கள் தொகுதிகளையும் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தும் பிரிவினருக்கு எதிராக அணி திரட்டும். எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் தலித் தொகுதிகளை வேர் மட்டத்தில் அணிதிரட்டுவதில் கணிசமான வெற்றி கண்டுள்ளார். அதனை வெகுஜன கட்சியாக விரிவாக்கவும் விரும்புகிறார். இது அனைத்திலுமே முக்கியமான வார்த்தை அணி திரட்டல் என்பதுதான்.
இந்த அணி திரட்டல் என்பது நிலத்தில் பள்ளம் தோண்டி, அஸ்திவாரம் இட்டு, அதன் மேல் செங்கற்களை அடுக்கி கட்டடம் எழுப்புவது போன்றது. அதன் முக்கியமான பகுதியே அந்த வேர்மட்ட அணிதிரட்டல்தான். அண்ணாவும், அவருடைய தளகர்த்தர்களும் தமிழ்நாடு முழுவதும் ஒயாமல் பயணம் செய்து, மரத்தடிகளிலும், பேருந்து நிலையங்களிலும், திண்ணைகளிலும் படுத்து உறங்கி கட்சியின் வேர்மட்ட அணிகளை உருவாக்கினார்கள். அதற்கு முன்னால் சமூகப் பரப்பை சுயமரியாதைக் கலப்பையால் பெரியார் சலியா உழைப்பால் உழுது விதைப்பிற்கு தயார் செய்திருந்தார். திராவிட இயக்கத்தின் வரலாறு உலக மக்களாட்சி வரலாற்றின் மகத்தான அத்தியாயம்.
இவற்றிற்கெல்லாம் மாறாக திரைப்பட நடிகர்கள் தங்களைப் பார்க்கக் கூடும் ரசிகர்கள் கட்சியின் அஸ்திவாரமாக மாறுவார்கள் என்று நினைப்பது, அணிதிரட்டல் என்பதன் பொருளையே அர்த்தமற்றதாக்குகிறது. ரசிகர்களுக்கு என்று என்ன அரசியல் கோரிக்கை இருக்கிறது? அவர்கள் நட்சத்திரக் கவர்ச்சிக்காக வருகிறார்கள். அந்த கவர்ச்சி அவர்களை ஒருங்கிணைப்பதற்கு போதுமான சிமெண்ட் கிடையாது. அவர்கள் உதிரிகளாகவே இருப்பார்கள். அவர்களை அஸ்திவாரமாக்கினால் கட்டிடம் சரிந்துவிடும்.

எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் முன்னுதாரணங்களா?
இதில் பெரிய பிரச்சினை என்னவென்றால் எம்.ஜி.ஆர் தலைவராகவில்லையா, என்.டி.ஆர் தலைவராகவில்லையா என்பது போன்ற அரைவேக்காட்டு கேள்விகள்தான். எம்.ஜி.ஆர் தி.மு.க என்ற வலுவான அஸ்திவாரத்தில் கட்டப்பட்ட மாளிகையின் நடுவில் சுவரெழுப்பி பாகம் போட்டுக்கொண்டார். அவருடைய நட்சத்திர பிம்பமே தி.மு.க சொல்லாடலால், கதையாடலால் உருவானதுதான். அவர் பாடல்கள், வசனங்கள் எல்லாமே தி.மு.க அரசியல் அணிதிரட்டலின் அங்கமாகவே புரிந்துகொள்ளப்பட்டன. அவருடன் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் சேர்ந்து வெளியேறி அ.இ.அ.தி.மு.க-வில் இணைந்தார்கள்.
என்.டி.ஆர் அதேபோலவே காங்கிரஸ் கட்சியின் ஒரு பகுதியைத்தான் தன் கட்சியாக்கிக் கொண்டார். பாஸ்கர ராவ், சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பல காங்கிரஸ் மந்திரிகள் அவர் கட்சியின் தூண்களாக விளங்கினார்கள். ஆந்திராவில் காங்கிரசிற்கு மாற்றாக கட்சிகள் எதுவும் இல்லாததால், தெலுகு தேசம் உருவாக இடமிருந்தது. மாநில அரசியல் இரு துருவ அரசியலாக மாறியது. ஆனால் அந்த என்.டி.ஆரால் கூட தன் கட்சியை முழுவதும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க இயலவில்லை.

விஜய்காந்த்தால் ஓரளவு கட்சிக்காரர்களுடன் பழக முடிந்தது. கட்சி அணிகளை உருவாக்க முடிந்தது. ஆனால் அவர்களை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவருடைய சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் முதல் முறை தேர்தலில் வென்றவுடனேயே அ.இ.அ.தி.மு.க-விற்கு சென்றார்கள். அந்த அளவுதான் விசுவாசம்; காரணம் அணிதிரட்டலுக்கு எந்த வலுவான சமூகவியல் வரலாற்றுப் பின்னணியும் இருக்கவில்லை. அவரை முதல்வர் வேட்பாளராகக் கொண்டு 2016-இல் மக்கள் நலக் கூட்டணி அமைக்கப் பட்டபோது அது படு தோல்வியைத் தழுவியது. அவரே அவர் தொகுதியில் வெற்றிபெற இயலவில்லை என்பது முக்கியமான உண்மை. பத்தே ஆண்டுகளில் கட்சி கலகலத்து விட்டது. ஆந்திராவில் என்.டி.ஆரை பின்பற்ற முயன்ற மெகாஸ்டார் சிரஞ்சீவி ஒரே தேர்தலுக்குப் பிறகு கட்சியைக் கலைத்துவிட்டார்.
இத்தனைக்கும் பிறகு விஜயைப் பார்க்க கூட்டம் வருகிறது என்று கூறுவதும், கருத்துக் கணிப்பில் அவருக்கு வாக்களிக்கப் போவதாகக் கணிசமானவர்கள் கூறுகிறார்கள் என்பதும் அரசியல் அணிதிரட்டல் என்பதன் அடிப்படைகளையே புரிந்துகொள்ளாத ஊடகப் பேச்சாகும். ஊடகங்கள் தங்கள் வணிகத்திற்காக இது போன்ற பரபரப்புகளை உருவாக்குகின்றன. மக்கள் நலக் கூட்டணி பற்றி எத்தனை பரபரப்பு உருவாக்கப்பட்டது என்பதை யாரேனும் அந்த ஆண்டின் ஊடக வெளிப்பாடுகளை வைத்துக்கொண்டு ஆராய வேண்டும். அப்போதுதான் ஊடகம் உருவாக்கும் சோப்புக் குமிழ்கள் எப்படிப்பட்டவை என்பதை உணர முடியும்.
விஜய் அரசியலின் தீமை என்ன?
விஜய் அரசியலின் தீமை என்னவென்றால் அவர் எந்த வகையிலும் அரசியல் தலைவராகத் தகுதியற்றவராக இருப்பதுதான். அவருக்கு அரசியல் பிரச்சினைகளை புரிந்துகொள்ளும் ஆற்றலே இருக்கிறதா என்பது ஐயமாக இருக்கிறது. அவர் தி.மு.க-வை தீவிரமாக எதிர்க்க வேண்டும் என்று நினைக்கிறார். அதை அவரால் பொறுப்பான ஒரு அரசியல் சொல்லாடலாக மாற்ற முடியவில்லை. கட்சியின் மூன்றாம் ஆண்டு விழாவில் அவர் பேசியது பெரும் அதிர்ச்சியளிக்கும் காட்சியாக இருந்தது. கட்சியின் வெற்றி வாய்ப்பினை விளக்க அவர் சிறுபிள்ளைத்தனமான நாடகத்தை நடித்துக் காட்டுகிறார். அது என்னவென்று பார்ப்போம்.
முதல்வர் ஸ்டாலின் அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கிறாராம். அவர் அருகில் சென்று “அங்கிள், அங்கிள்” என்று கூப்பிடவேண்டுமாம். அவர் தூக்கம் முழுமையாகக் கலையும் முன்னால் நீங்கள் என்ன சின்னத்திற்கு ஓட்டுப்போடுவீர்கள் என்று கேட்க வேண்டுமாம். அவர் “விசில் சின்னம்” என்று கூறிவிடுவாராம். அப்படி அவரே விசில் சின்னத்தைத்தான் நினைத்திருக்கிறார் என்பதால் அனைவருமே விசில் சின்னத்திற்குத்தான் வாக்களிப்பார்களாம். திரைப்படங்களில் சிறுவர்களை, முதிரா மனதினரைக் கவர அவர் செய்யும் கோமாளித்தனம் போலவே இதைப் பேசிக் காட்டுகிறார்.
தமிழ்நாட்டின் மக்கள் தொகுதி, எட்டு கோடி பேருக்கு மேல் கொண்ட மக்கள் தொகுதி. இந்திய மாநிலங்களை தனி மக்கள் தொகுதிகளாக கணக்கிட்டால், உலக அளவில், 195 நாடுகளில் 24-ஆவது பெரிய மக்கள் தொகுதியாகும். உலக பொருளாதாரத்திலும் ஒரு டிரில்லியன் பொருளாதாரம் கொண்ட நாடுகள் 20 நாடுகள்தான். அதில் ஒன்றாக இடம்பெற முன்னேறுகிறது தமிழ்நாடு. அத்தகைய ஒரு மாநிலத்தை ஆட்சி செய்ய விரும்புபவர் பேசுகிற பேச்சா இது என்று அயர்ச்சியாக இருக்கிறது.

தமிழ்நாட்டு ஊடகங்களை அவர் சந்திக்காவிட்டாலும் என்.டி.டி.வி, இந்தியா டுடே ஆகிய அகில இந்திய ஊடகங்கள் சென்னையில் நடத்திய விவாத அரங்கங்களில் பங்கேற்க விஜய்க்கு என்ன தடை என்று புரியவில்லை. இன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னாள் முதலமைச்சர் பழனிசாமி உட்பட எல்லோரும் கலந்து கொண்டார்கள். ஆனால் விஜய் மட்டும் பனையூருக்கே அவர்களை வரச்சொல்லி விட்டார். அங்கேயும் அவர்கள் காமிராவில் நேர்காணலை பதிவு செய்ய அனுமதிக்கவில்லை. அவர்களுடன் பேசிவிட்டு அனுப்பிவிட்டார். அவருடன் பேசியவர்களைத்தான் அந்த ஊடகங்கள் நேர்காணல் செய்து அவர் என்ன சொல்கிறார் என்று கேட்டறிந்தன. இது இந்தியக் குடியரசு இதுவரை காணாத அதிசயம் எனலாம்; பேரவலம் எனலாம்.
இத்தனைக்கும் விஜய் காமிரா முன் வெளிச்சத்தில் இயங்கி பழகியவர். அவருக்குக் கூச்சம் இருக்க வாய்ப்பில்லை. பிறகு ஏன் ஆங்கில ஊடகங்களின் மேடையில் தோன்ற மறுக்கிறார் என்று சிந்தித்தால் திடுக்கிடும் எண்ணமொன்று தோன்றுகிறது. அவரால் வசனங்களை பிறர் சொல்லிக்கொடுக்காமல், எப்படி பேச வேண்டுமென்று இயக்காமல் எதையும் பேச முடியாதோ என்ற ஐயம்தான் அது. அதாவது ஒரு நடிகராகத்தான் அவரால் எந்த நேரமும் இருக்க முடியுமோ என்ற அச்சமூட்டும் எண்ணம் பிறக்கிறது.
அப்படியானால் விஜய் கட்சி துவங்க முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற பதவி மோகம் தவிர வேறு காரணம் எதுவுமில்லை என்றுதான் தோன்றுகிறது. அதற்கு அடிப்படையாக ஆங்கிலத்தில் நார்சிஸம் எனப்படும் சுயமோகம் விளங்குகிறது. அவரது தந்தை சந்திரசேகர் சிறுவயதிலேயே கதாநாயக நடிகனாகவேண்டும், அரசாளவேண்டும் என்பது போன்ற ஆசைகளை அவர் மனதில் விதைத்திருக்கலாம். அதனால் உலக அனுபவம் எதுவும் இல்லாமல், உலகத்தை எதிர்கொள்ளும் ஆற்றலும் இல்லாமல், தன் திரைபிம்பத்தை மட்டுமே பணயம் வைத்து மக்களாட்சி அனுமதிக்கும் சுதந்திரத்தை பயன்படுத்திக்கொண்டு கட்சி துவங்கியுள்ளார் என்றுதான் கருத முடிகிறது.
அப்படி ஒரு தனிநபரின் மனமயக்கத்திற்கு, அதனால் ஏற்படும் குழப்பங்களுக்கு, உலகின் முதிய பண்பாடுகளில் ஒன்றைக் கொண்ட தமிழ்நாடு இடம் கொடுப்பது என்பது வருந்தத்தக்கது. அதற்கு முக்கிய காரணம் ஊடகங்களின் அறமற்ற வணிக நோக்கு என்றுதான் தோன்றுகிறது. தங்களுடன் பேசவே மறுக்கும் ஒரு மனிதருக்குக் கண்டன ங்களைத் தெரிவிப்பதற்குப் பதிலாக, அவர்கள் வெட்கமற்றுத் தரும் முக்கியத்துவம், மக்களாட்சியின் தூண்கள் செல்லரித்துப் போயுள்ளன என்பதைத்தான் காட்டுகிறது.

அவருடைய பொறுப்பற்ற காட்சிப்பிம்ப அரசியலால் கரூரில் நாற்பத்தோரு உயிர்கள் பலியாயின. சென்ற வாரம் சேலத்தில் ஒருவர் இறந்துள்ளார். அவர் தன் அணுகுமுறையை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை. என்னதான் நினைக்கிறார் என்றும் யாருக்கும் தெரிவதில்லை. அரசியலுக்கு அப்பாற்பட்டு மக்கள் நலனில் அக்கறை கொண்டோர் அனைவரும் இந்த மூடுமந்திர அரசியலை கண்டிப்பது அவசியம்.
கட்டுரையாளர் குறிப்பு:

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com
