போதைப் பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்தை போலீசார் இன்று (ஜூன் 23) கைது செய்தனர். actor srikanth arrested in drug case
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த நடிகர் ஸ்ரீகாந்த், நீண்ட ஆண்டுகளாக ஒரு வெற்றிப் படம் கூட கொடுக்க முடியாமல் தடுமாறி வருகிறார்.
இதற்கிடையே போதைப்பொருள் சப்ளை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிரசாத் மற்றும் பிரதீப் ஆகியோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அப்போது நடிகர் ஸ்ரீகாந்த்தும், மற்றொரு நடிகரும், பிரசாத் மூலமாக என்னிடம் இருந்து கொக்கைன் பெற்றனர் என பிரதீப் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனையடுத்து நடிகர் ஸ்ரீகாந்தை இன்று காலை அவரது வீட்டில் இருந்து விசாரணைக்காக அழைத்துச் சென்ற நுங்கம்பாக்கம் போலீசார், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவருக்கு மருத்துவப் பரிசோதனை அனுமதித்தனர். அங்கு அவரது ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்ட நிலையில், அவர் போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதியானது.
மேலும் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் ஸ்ரீகாந்திடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவருடைய ஜி பேயில் இருந்து மிகப்பெரிய தொகையை அனுப்பி கொக்கைன் வாங்கப்பட்டுள்ளதை போலீசார் உறுதி செய்தனர். இதனையடுத்து போதைப் பொருள் வழக்கில் அவரை 3வது குற்றவாளியாக போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.
இந்தவழக்கில் முதல் குற்றவாளியாக பிரதீப் மற்றும் இரண்டாவது குற்றவாளியாக கானா நாட்டைச் சேர்ந்த ஜான் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.