Actor Ramesh Thilak
ரமேஷ் திலக். தமிழ் திரையுலகில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ‘யதார்த்தமான நடிப்பு’ என்று குறிப்பிடும்படியாகச் சிலரது பங்களிப்பு இருக்கும். அதனைக் கொஞ்சம் மீறினாலும், ‘க்ரிஞ்ச்’ என்ற முத்திரை விழுந்துவிடும். சில நேரங்களில் அடுத்த தலைமுறை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அவர்களது இருப்பு சிறப்பானதாக அமையும். அப்படியொரு கலைஞராகச் சமகாலத்தில் திகழ்பவர் ரமேஷ் திலக். Actor Ramesh Thilak
வெடவெட என்று உயரம். தாடிக்குள் பொதிந்திருக்கும் சிறிய முகம். கணீர் குரல். அதற்குப் பொருத்தமாக, முரட்டுத்தனம் வெளிப்படுத்தும் உடல்மொழி. இவை அனைத்திலிருந்தும் விலகி நிற்கிற விதமான குணாதிசயங்களை நடிப்பில் வெளிப்படுத்துகிற பாங்கு. இப்படித் தான் நடிக்கும் படங்களில் ரசிகர்களைத் தொடர்ந்தாற்போல ஆச்சர்யப்படுத்தி வருபவர் ரமேஷ் திலக். இன்றைய இளைய தலைமுறையினரை நெருங்குகிற நடிப்புத் திறமையைக் கொண்டவர். Actor Ramesh Thilak
சென்னை போன்ற பெருநகரங்களில் வெவ்வேறு இடங்களில் இருந்து வந்து சேர்ந்தவர்களே அதிகம். அவர்களது வாரிசுகள் அந்த மண்ணின் மைந்தர்களாக மாறியிருப்பார்கள். அப்படிப்பட்ட பாத்திரங்களைத் திரையில் சிறப்பாகப் பிரதிபலிக்கிற ரமேஷ் திலக்கும் நிஜ வாழ்வில் அத்தகைய சூழலைக் கண்டவர். Actor Ramesh Thilak
இவர் பிறந்த தேதி மே 3, 1985. பள்ளி, கல்லூரி படிப்பை முடித்தவுடன் ‘ஊடகமே நமக்கான உலகம்’ என்று பயணிக்கத் தொடங்கியவர், முதுகலை தொடர்பியல் படிப்பை மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்தார்.
2000களுக்கு பிறகு, பண்பலை வானொலி அலைவரிசை தமிழ்நாட்டில் உரம் பெற்றது. அந்த அலையில் பிணைத்துக்கொள்ளும்விதமாக, சூரியன் எப்.எம்.மில் இவருக்குப் பணி அமைந்தது. Actor Ramesh Thilak
பொதுமக்கள், பிரபலங்கள் என எல்லோரிடமும் ஒரேமாதிரியான தொனியில் பேசுகிற வாய்ப்பு. அவர்களோடு உரையாடி, அவர்கள் குறித்த தெரியாத விஷயங்களை தெரியப்படுத்துகிற சவால். அனைத்தையும் தாண்டி, ஒவ்வொரு முறையும் புதிதாகப் பலவற்றை அறிகிற உற்சாகம் என்றிருந்த தொகுப்பாளர் பணியோடு கலந்து போனார் ரமேஷ் திலக். Actor Ramesh Thilak

ஆனாலும், ஒரு காலகட்டத்தில், ‘வேறு துறையிலும் கால் பதிக்கலாமே’ என்ற எண்ணம் ரமேஷ் திலக் மனதில் உண்டானது. அப்போது, அவரது நண்பர்களில் பலர் திரையுலகில் வெவ்வேறு பிரிவுகளில் உச்சம் தொட ஓடிக் கொண்டிருந்தார்கள்.
அவர்களுக்குத் துணை நிற்கும்விதமாகச் சென்றவர், பிறகு மெல்லத் தனது புகைப்படங்களை எடுத்துக்கொண்டு தயாரிப்பு நிறுவனங்களில் ஏறி இறங்கினார். பெரும்பாலான இடங்களில் ஏமாற்றம். வழியும் வியர்வையாக நினைத்து அவ்வனுபவங்களைத் துடைத்தெறிந்துவிட்டு தொடர்ந்தாற்போல ஓட்டம்.
அந்த நேரத்தில் ரமேஷ் திலக் கைக்கொண்டிருந்த ‘ஆர்ஜே’ எனும் அடையாளம், அவரைப் பிரபலங்களிடத்தில் இருந்து விலக்கவில்லை. தனக்கிருந்த நேர்மறை அம்சங்களை மட்டுமே நோக்கியவர், மெல்ல கேமிரா எனும் கருவிக்கு நெருக்கமான தொலைவுக்குப் பயணிக்கத் தொடங்கினார். Actor Ramesh Thilak
மாப்பிள்ளை, மங்காத்தா ஆகிய படங்களில் ’பத்தோடு பதினொன்றாக’ திரையில் தெரிந்தார். அந்த காலகட்டத்தில் ‘முகப்புத்தகம்’ எனும் குறும்படத்திலும் நடித்தார்.
ஆனாலும், ‘நாளைய இயக்குனர்’ நிகழ்ச்சியில் வந்த ’தோட்டா விலை என்ன’ குறும்படம் இவருக்கு இன்னொரு பரிமாணத்தைக் கொடுத்தது. இயக்குனர் நலன் குமாரசாமியின் நட்பு கிடைக்கச் செய்தது.
இன்னும் பல குறும்படங்களின் இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள், படத்தொகுப்பாளர்கள், நடிகர்களை அறிமுகப்படுத்தியது.
அன்று, அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அத்தனை பேருமே அடுத்தடுத்து திரைப்படங்கள் ஆக்கத் தொடங்கினர்.
அப்படித்தான் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் ‘நேரம்’ படத்தில் முதன்முறையாக வசனம் பேசுகிற பாத்திரத்தைப் பெற்றார் ரமேஷ் திலக். ஆனால், அதன்பிறகு படமாக்கப்பட்ட ‘சூது கவ்வும்’ முதலில் வெளியானது. அந்த படத்தில் விஜய் சேதுபதியோடு படம் முழுக்கப் பயணிக்கிற வாய்ப்பு ரமேஷ் திலக்கை பட்டிதொட்டி எங்கும் கொண்டு சேர்த்தது.

குறும்படங்களுக்கும் திரைப்படங்களுக்குமான இடைவெளியில் ‘கனா காணும் காலங்கள்’ சீரியல் வழியே ஒவ்வொரு வீட்டின் வரவேற்பறைக்கும் சென்ற அனுபவமும் இவருக்கு உண்டு. குறுகிய காலத்தில் கிடைத்த அந்த வரவேற்பு பின்னாட்களில் தியேட்டரில் இவரைக் கண்டபோது விசிலடிக்க வைத்தது.
2014ஆம் ஆண்டு, பாலாஜி மோகன் இயக்கிய ‘வாயை மூடிப் பேசவும்’ படத்தில் நடித்தார் ரமேஷ் திலக். அது மலையாளத்திலும் வெளியானது.
தொடர்ந்து இவர் நடித்த ‘டிமாண்டி காலனி’, ‘காக்கா முட்டை’, ‘ஆரஞ்சு மிட்டாய்’ படங்களில் விதவிதமான வேடங்கள். தோற்றத்தில் வித்தியாசம் இல்லாதபோதும் நடிப்பில் ‘வெரைட்டி’ காட்டுகிற வாய்ப்புகள். அனைத்தையும் சாதகமாக்கிக் கொண்டு மேலேறினார் ரமேஷ் திலக்.
2016இல் வந்த ‘ஒருநாள் கூத்து’, இவரது திரையுலகப் பயணத்தைத் திசை மாற்றிய படங்களில் குறிப்பிடத்தக்கது. திரையில் வரும் நேரம் மிகச்சிறியது என்றபோதும், அப்படத்தில் அது ஆற்றிய தாக்கம் மிகப்பெரியது.
அதன்பின்னர் ‘கபாலி’, ‘ஆண்டவன் கட்டளை’, ‘மோ’, ‘காலா’, ’இமைக்கா நொடிகள்’, ‘விஸ்வாசம்’ பட வாய்ப்புகள். ஆண்டுக்கு ஐந்தாறு படங்களில் ரமேஷ் திலக் நடித்த காலகட்டம் அது. அவற்றால் பணமும் புகழும் அதிகமானது.
ஆனாலும், ‘யானைக்கு வாலா, எலிக்கு தலையா’ என்று தனது இருப்பை முடிவு செய்ய வேண்டிய கேள்வி எழுந்தபோது, சிறிய படங்களைத் தனக்கானதாகத் தேர்ந்தெடுத்தார் ரமேஷ் திலக். அதற்கேற்ற பலன் அடுத்தடுத்த ஆண்டுகளில் கிடைக்கத் தொடங்கின. அதன்பிறகு இரண்டு கரைகளுக்கும் நடுவே சமநிலை பேணுகிற பக்குவம் அவருக்கு வாய்த்தது.

’ஓ மை கடவுளே’ படத்தில் கடவுளின் உதவியாளராக, ‘யானை முகத்தான்’ படத்தில் ஆட்டோ ஓட்டுநராக, ‘குட் நைட்’டில் நாயகனின் மச்சானாகத் தோன்றினார். ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ படங்களில் ஏற்ற பாத்திரங்கள் சிறிதென்றபோதும், திரைக்கதையில் அவை குறிப்பிடும்படியாகத் தெரிந்தன.
ஒரு வெற்றி கிடைத்தால் அதனைப் பிரதியெடுக்க, அந்தச் சூழலை அப்படியே நகலெடுக்கும் வேலைகள் இறங்குவது திரையுலகில் சிலரது வழக்கம். அவர்களது ‘ஜெராக்ஸ்’ பணியில் இருந்து தப்புவதுதான் ’வெரைட்டி’ விரும்புகிற நடிப்புக் கலைஞர்களின் முதல் வேலையாக இருக்கும்.
அந்த வகையில் தன் மீது விழுகிற முத்திரைகளில் இருந்து தொடர்ந்து நழுவி ஓடிக் கொண்டிருப்பவர்களில் ஒருவராகத் தெரிகிறார் ரமேஷ் திலக். இன்றும் கூட, திரையில் தான் தெரிகிற நொடிகளை இவர் கணக்கிடுவதே இல்லை.
அதனாலோ என்னவோ, அந்த படங்களில் இவரது பங்களிப்பை ரசிகர்கள் நினைவில் பொதித்து வைக்கின்றனர். சமீபத்தில் வந்த ‘டூரிஸ்ட் பேமிலி’ அதற்கொரு உதாரணம்.

அது போன்ற படங்களின் வெற்றியே ரமேஷ் திலக் போன்ற கலைஞர்களின் அடுத்தடுத்த வாய்ப்புகளை, உயரங்களை உறுதிப்படுத்துகிறது. Actor Ramesh Thilak
’கும்பளாங்கி நைட்ஸ்’, ‘2018’ என்று அவர் இணைந்து பணியாற்றிய மலையாளப் படக் குழுவினரின் பாராட்டுகளை மலை போலக் குவிக்கக் காரணமாகிறது.
பத்திரிகை பேட்டிகள், விருது விழாக்கள், குடும்ப நிகழ்வுகள் என்று திரையுலகப் பணிகளுக்கு நடுவே வெவ்வேறு உலகங்களுக்குப் பயணிப்பதற்குத் தெளிவும் துணிச்சலும் வேண்டும். விரும்பாத பணிகளில் ஈடுபடாமல் இருக்க ‘நோ’ சொல்லத் தெரிந்திருக்க வேண்டும். அடுத்தடுத்த படிகளை அடைய, புதிய வாய்ப்புகளைத் தேடித் திரியத் துணிய வேண்டும். ‘எல்லாமே என்னிடத்தில் உண்டு’ என்று தொடர்ந்து பயணிக்கிற ரமேஷ் திலக், நடிப்பைத் தாண்டி வேறு துறைகளிலும் தனக்கான உயரங்களைத் தொட வேண்டுமென்பதே அவரது நடிப்பை ஆராதிப்பவர்களின் ஆசை..!