இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் தம்மை பற்றி விமர்சித்ததற்கு அவரது பெயரைக் குறிப்பிடாமல் கண்டனம் தெரிவித்துள்ளார் நடிகை திரிஷா.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யிடம் இருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரியிருக்கிறார். ஒரு நடிகையுடனான தொடர்பால்தான் இந்த பிரச்சனை எழுந்ததாக சங்கீதா குற்றம்சாட்டி இருந்தார்.
இந்நிலையில் நடிகை திரிஷாவும் விஜய்யும் ஒரே காரில் ஒரே நிற உடையில் ஜோடியாக திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறித்து கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் திரிஷாவின் போட்டோவை காண்பித்து நடிகர் பார்த்திபனிடம் கருத்து கேட்கப்பட்டது. இதற்கு, “இந்த குந்தவையை கொஞ்ச நாள் குந்தவைக்கறது (உட்கார வைப்பது) நல்லது. இந்த குந்தவையை வீட்டுக்குள்ளேயே குந்தவைக்கறது கொஞ்சம் நல்லதுங்க, வெளிய வராம பாத்துக்கங்க. அதுனால நிறைய பிரச்சனைகள் உண்டாகாம பாத்துக்கலாம். அதுனால சில கவிதைகளை ரசிக்கலாமே தவிர, அந்த கவிதையை சொல்லாம இருக்கிறது பெட்டர்னு நினைக்கிறேன்” என பார்த்திபன் கூறியிருந்தார்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் திரிஷா நடித்திருந்ததை சுட்டிக்காட்டி பார்த்திபன் இதனைத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நடிகை திரிஷா தமது எக்ஸ் பக்கத்தில் சற்று முன்னர், “ஒரு நபர் தமது உதவியாளர்” மூலமாகத் தெரிவித்த வேண்டுகோளுக்கிணங்க, கடைசி நிமிடத்தில் எனது பெயரும் படமும் சமீபத்திய நிகழ்வில் சேர்க்கப்பட்டதாக அந்த அமைப்பாளர்கள் என்னிடம் தெரிவித்தனர்.
மைக்கில் பேசிவிட்டால் ஒரு கருத்தை அறிவார்ந்தது அல்லது நகைச்சுவையானது என மாற்றிவிடாது. அது முட்டாள்தனத்தை உரக்கச் சொல்ல மட்டுமே உதவும். அறிவு இல்லாமல் பேசப்படும் தரம் குறைந்த வார்த்தைகள், அவை யாரை நோக்கி வீசப்படுகிறதோ அவரை விட, பேசுபவரின் தரத்தையே அதிகம் வெளிப்படுத்திவிடும்.” என பதிவிட்டுள்ளார்.
நடிகர் பார்த்திபன் பெயரையோ அந்நிகழ்ச்சியையோ திரிஷா இதில் குறிப்பிடவில்லை. ஆனாலும் திரிஷாவின் எக்ஸ் பக்கத்தில் நெட்டிசன்கள் பலரும் இந்த நிகழ்ச்சியை குறிப்பிட்டு வருகின்றனர். மேலும் விஜய் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட காரணமே திரிஷாதான் என குற்றம்சாட்டி அவரை மிகக் கடுமையாகவும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
