சேலத்தில் அரசு பேருந்து மோதிய விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது.
இன்று மதியம் 12 மணியளவில் ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி 30 பயணிகளுடன் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது.
உத்தமசோழபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பிரேக் பிடிக்காததால் பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனை தாண்டி எதிர்பக்க திசையில் வேகமாக சென்று நின்றது.
அப்போது எதிர் திசையில் வந்த சரக்கு வாகனம் அரசு பேருந்து மீது மோதியதில் அதன் முன் பக்கம் முற்றிலுமாக சேதமடைந்தது.
அந்த சரக்கு வாகனத்தை சேலம் கொண்டலாம்பட்டி புதூர் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த மேகநாதன் வாடகைக்கு ஓட்டி வந்துள்ளார். அதில் கொண்டலாம்பட்டியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் குடும்பத்துடன் மகுடஞ்சாவடி கல்பார்ப்பட்டியில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு சென்று கொண்டிருந்தனர்.
அதில் சுமார் 11 பேர் பயணித்த நிலையில் இந்த விபத்தில் செல்வராஜ், அமுதா, முருகன், நித்திஷ்கா(5), 11 மாத குழந்தை என ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் அந்த வழியே இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீது அரசு பேருந்து மோதியதில் கொண்டலாம்பட்டி சந்தன காரன் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் அவரது தாய் இருசாயி ஆகியோரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த கோர விபத்தால் இரு பக்கமும் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கொண்டலாம்பட்டி போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
படுகாயம் அடைந்தவர்கள் அரியலூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் அரசு பேருந்து ஓட்டுநர் ஐயந்துரை கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த பயங்கர விபத்து தொடர்பான காட்சிகள் அந்த பகுதியில் இருந்த பெட்ரோல் பங்கில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பார்ப்பவர்களின் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது.
