பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 75 சதவிகித வருகைப்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மத்திய இடைநிலை கல்வி வாரியம், தனது மாணவர்களுக்கு அவ்வபோது மாற்றங்களை கொண்டு வருகிறது. சமீபத்தில் இனி ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்தது.
இந்தநிலையில் இன்று (ஆகஸ்ட் 6) சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், “ எதிர்வரும் பொதுத் தேர்வை எழுதும் 10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 75 சதவிகித வருகைப்பதிவு கட்டாயம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “மருத்துவ அவசரநிலைகள், தேசிய அல்லது சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்பது, உள்ளிட்ட முக்கிய காரணங்களுக்கு உரிய ஆவணங்கள் இருந்தால் மேலும் 25 சதவீத தளர்வு வழங்கப்படும். இதனை அனைத்து பள்ளிகளும் முறையாக பின்பற்ற வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளது.
“சிபிஎஸ்சி பள்ளிகளில் திடீரெனஆய்வு மேற்கொள்ளும் போது முறையான பதிவுகள் இல்லாமல் இருந்தால், அந்த மாணவர் பள்ளிக்கு வராதவர் அல்லது போலியானவர் என்று கருதப்படும். அத்தகைய மாணவர்கள் பொதுத் தேர்வுகளில் கலந்துகொள்ள அனுமதிக்க மாட்டார்கள். வருகை பதிவை முறையாக பராமரிக்காத பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்கள் அடிக்கடி பள்ளிக்கு வராமல் இருந்தால் அந்த தகவலை பெற்றோருக்கு முறையாக தெரிவிக்க வேண்டும்” என்றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது