நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே, இன்று (மார்ச் 17) எரிந்த நிலையில் மீட்கப்பட்ட கார் ஒன்றில் நான்கு பேர் சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அடுத்துள்ள பெட்டைகுளம் பனங்காட்டுப் பகுதியில், இன்று அதிகாலை ஒதுக்குப்புறமான இடத்தில் கார் ஒன்று தீப்பிடித்து எரிந்த நிலையில் நின்று கொண்டிருந்தது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் காரை ஆய்வு செய்தபோது, உள்ளே நான்கு பேர் உடல் கருகிய நிலையில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக சடலங்களை மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவலறிந்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, காரில் இருந்த முக்கியத் தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
இது திட்டமிட்ட கொலையா அல்லது தற்கொலையா? காரில் ஏசி போட்டு உறங்கியபோது ஏற்பட்ட கசிவால் கார் தீப்பற்றி எரிந்ததா? என பல கோணங்களில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
காரின் பதிவு எண்ணை வைத்து முதற்கட்ட விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களா அல்லது நண்பர்களா என்பது குறித்த விவரங்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இச்சம்பவம் திசையன்விளை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
