தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு மாமல்லபுரத்தில் இன்று (பிப்ரவரி 2) தொடங்கியது.
அப்போது முதல்வர் முன் பல்வேறு சுற்றுலா பிரிவுகளில், 22 ஆயிரத்து 794 கோடியே 78 லட்சம் ரூபாய்க்கான உறுதியளிக்கப்பட்ட முதலீடு, 65, 937 நபர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் 127 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின் சுற்றுலா துறைக்காக மூன்று அறிவிப்புகளை வெளியிட்டார்.
இதுகுறித்து அவர், “
*உலக சுற்றுலா வரைபடத்தில் கலை மற்றும் பண்பாட்டு சுற்றுலாத் தலமாக தமிழ்நாடு இடம்பெற, முதன்முறையாக, அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் “தமிழ் பினாலே” நடத்தப்படும்.
*மாமல்லபுரத்திற்கு வருகின்ற சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த, முதன்முதலாக மாமல்லபுரத்தில் ‘சிறப்பு பகுதி மேம்பாட்டு ஆணையம்’ அமைத்து, அதன்மூலமாக, 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில், உலக தரத்தில், நவீன சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்!
மூன்றாவது அறிவிப்பு – 2023-ஆம் ஆண்டு சுற்றுலா கொள்கை அறிவிப்பை அடிப்படையாகக் கொண்டு, சிப்காட் நிறுவனம் சுற்றுலா தலங்களை கண்டறிந்து, முதலீடுகளை ஈர்த்து, புதிய சுற்றுலா வசதிகளை உருவாக்கவுள்ளது.
இதன் முதற்கட்டமாக, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, ஈரோடு மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நான்கு சிறப்பு சுற்றுலா இடங்கள் அடையாளம் கண்டறியப்பட்டு, முதலீடுகளை ஈர்க்க விருப்பப்பதிவு கோரிக்கைகள் அழைக்கப்பட்டிருக்கிறது.
அடுத்து, இரண்டாம் கட்டமாக தமிழ்நாடு முழுவதும் 31 இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. இவை, நகர்ப்புற சுற்றுலா, சிறப்பு அனுபவ சுற்றுலா, பெரிய சுற்றுலா மையங்கள் என்று பிரிக்கப்பட்டு, இதில் தங்குமிடங்கள், தீம் பார்க்குகள், கேம்பிங் சைட்ஸ் (Camping Sites), இயற்கை அனுபவத் தங்குமிடங்கள் ஆகியவை ஏற்படுத்தப்பட உள்ளது. இதனால், தமிழ்நாடு முழுவதும் பல இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று மகிழ்ச்சியுடன் நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த மாநாடு மூலமாக, உலக மக்களுக்கு நான் வைக்கக்கூடிய வேண்டுகோள் என்னவென்றால், தமிழ்நாட்டை, உங்களின் Favourite Destination-ஆக Bookmark செய்துகொள்ளுங்கள். இங்கு இயற்கை – வரலாறு – பண்பாடு – உணவு ஆகியவற்றுடன் உங்களை வரவேற்க, அன்பால் அரவணைக்க தமிழ் மக்கள் இருக்கிறோம்.
நான் உறுதியாக சொல்கிறேன்… தமிழ்நாட்டிற்கு சுற்றுலா பயணிகளாக வரும் நீங்கள் உங்கள் நாடுகளுக்கு திரும்பும்போது, மறக்க முடியாத நினைவுகளுடன் மட்டுமல்ல, அன்பு மிகுந்த சொந்தங்களையும் உங்கள் நெஞ்சில் சுமந்துகொண்டு செல்வீர்கள்! தமிழ்நாடு எங்களின் Second Home என்று உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்வீர்கள்! எனவே, உலக மக்கள் அனைவரும் தமிழ்நாட்டிற்கு வருக… வருக” என்று அழைப்பு விடுத்தார்.
