சிறுமிகளை பலாத்காரம் செய்த ஜோதிடருக்கு 200 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது சிவகங்கை போக்சோ நீதிமன்றம்.
காரைக்குடி மானகிரியை சேர்ந்தவர் ஜோதிடர் ராமகிருஷ்ணன். 2001-ம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 2 சிறுமிகளை நன்றாக படிக்க வைக்க பரிகார பூஜை செய்ய அழைத்துள்ளார் ஜோதிடர் ராமகிருஷ்ணன். அப்போது சிறுமிகளை அந்த ஜோதிடர் பலாத்காரம் செய்தார் என்பது குற்றச்சாட்டு.
ஆனால் ஜோதிடர் மிரட்டியதால் பெற்றோரிடம் சிறுமிகள் தங்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளை வெளியே சொல்லவில்லை. பின்னர் சிறுமிகள் இருவரும் அடுத்தடுத்து பால்வினை நோயால் பாதிக்கப்பட்ட போதுதான் ஜோதிடரால் பலாத்காரம் செய்யப்பட்ட விவரத்தை பெற்றோரிடம் தெரிவித்தனர்.
இது தொடர்பாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டு ஜோதிடர் ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்த சிவகங்கை போக்சோ விரைவு நீதிமன்றம், குற்றவாளி ராமகிருஷ்ணனின் செயலுக்குக் கடுமையான தண்டனையை விதித்துள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் 376 (பாலியல் வன்கொடுமை), 506 (மிரட்டல்), 328 (மயக்க மருந்து, ஏமாற்றுதல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன.
இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி கோகுல்முருகன், ஜோதிடர் ராமகிருஷ்ணனுக்கு 200 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தார். அத்துடன், பாதிக்கப்பட்ட இரண்டு சிறுமிகளுக்கும் தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீட்டை தமிழக அரசு வழங்கவும் உத்தரவிட்டார்.
