நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்களின் மூலம் நேற்று வரை மட்டும் 13 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் புதிய சுகாதார திட்டமான நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டம் பொதுமக்களுக்கு இலவசமாக முழு உடல் பரிசோதனை வழங்கும் நோக்கில் செயல்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மிகச் சிறப்பான திட்டம். ஏராளமான மக்கள் பயன் பெறுகிறார்கள் என்பதை நான் பார்த்து மகிழ்ந்தேன் என நேற்று தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று (டிசம்பர் 28) தனது எக்ஸ் பதிவில், “உங்களைத் தேடி, உங்கள் பகுதிகளுக்கே வந்து உங்களின் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்களின் மூலம் நேற்று வரை மட்டும் 13 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர்!
Full Body Health CheckUps, சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனைகள் போன்றவையால் தொடக்க நிலையிலேயே பல இலட்சம் மக்களின் பிரச்சினைகள் கண்டறியப்பட்டு, உரிய உயர்தரச் சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்பட்டு அவர்களின் உயிர் காத்துள்ளோம்! முகாம்களிலேயே முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைத்து மக்களின் துயர் துடைத்துள்ளோம்.
நலம் பெற்றோரின் குடும்பத்தினர் கூறும் நன்றிகளோடு தொடர்கிறது நலம் காக்கும் ஸ்டாலின்!” என தெரிவித்துள்ளார்.
