நாடு முழுவதும் ரூ.5862 கோடி செலவில் 57 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைத் திறக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, அதிகரித்துள்ள மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகளின் கல்வித் தேவைகளை எளிதாக்கும் வகையில் நாடு முழுவதும் 57 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைத் தொடங்க ஒப்புதல் அளித்துள்ளது.
2026-27 முதல் ஒன்பது ஆண்டு காலத்தில் 57 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை தொடங்குவதற்கான மொத்த நிதி தேவை 5862.55 கோடி (தோராயமாக) ரூபாயாகும். இதில் மூலதனச் செலவாக 2585.52 கோடி (தோராயமாக) ரூபாயும், செயல்பாட்டுச் செலவாக 3277.03 கோடி (தோராயமாக) ரூபாயும் அடங்கும். தேசியக் கல்விக் கொள்கை, 2020-க்கான முன்மாதிரிப் பள்ளிகளாக, முதன்முறையாக, இந்த 57 கேந்திரிய பள்ளிகளில் பால்வாடிகள், அதாவது 3 ஆண்டுகள் தொடக்கக் கல்விக்கு முந்தைய நிலையிலான வகுப்புகள், தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

கேந்திரியா வித்யாலயா பள்ளிகள் பின்னணி என்ன?
பாதுகாப்பு மற்றும் துணை ராணுவப் படைகள் உட்பட மத்திய அரசில் பணியிட மாற்றம் செய்யக்கூடிய மற்றும் இடமாற்றம் செய்ய முடியாத ஊழியர்களின் குழந்தைகளின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நாடு முழுவதும் சீரான தரத்தில் கல்விக்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், 1962 – ம் ஆண்டு நவம்பரில் கேந்திரியா வித்யாலயா பள்ளிகள் தொடங்கும் திட்டத்தை மத்திய அரசு அங்கீகரித்தது. இதன் விளைவாக, “மத்திய பள்ளிகள் அமைப்பு” மத்திய கல்வி அமைச்சகத்தின் ஒரு பிரிவாகத் தொடங்கப்பட்டது.
1,288 கேவி பள்ளிகள்
புதிய கேந்திரிய வித்யாலயாப் பள்ளிகளைத் திறப்பது ஒரு தொடர் செயல் முறையாகும். மத்திய அரசு அமைச்சகங்கள் / துறைகள், மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் உட்பட பல்வேறு தரப்புகளிடமிருந்து தொடர்ந்து முன்மொழிவுகள் பெறப்பட்டு வருகின்றன. இன்றைய நிலவரப்படி, மாஸ்கோ, காத்மாண்டு மற்றும் தெஹ்ரான் ஆகிய வெளிநாடுகளில் உள்ள 3 பள்ளிகள் உட்பட 1,288 கே.வி. பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. 30.06.2025 நிலவரப்படி மொத்த மாணவர் சேர்க்கை 13.62 லட்சமாக உள்ளது.
புதிய கல்விக் கொள்கைப்படி ஶ்ரீபள்ளிகளாக மாற்றம்
தேசிய கல்விக் கொள்கை 2020 – ன் படி, 913 கே.வி. பள்ளிகள் பிரதமரின் ஸ்ரீ பள்ளிகளாக மாற்றப்பட்டுள்ளன. இப்பள்ளிகளில் தரமான கல்வியை கற்பித்தல், புதுமை கற்பித்தல் முறை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் காரணமாக மிகவும் விரும்பப்படும் பள்ளிகளில் ஒன்றாக உள்ளது. ஆண்டுதோறும் பால்வாடிகள் / முதல் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையில் தொடர்ச்சியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் நடத்தும் தேர்வுகளில் கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்களின் செயல்திறன் அனைத்து கல்வி முறைகளிலும் தொடர்ந்து சிறப்பாக இருந்து வருகிறது.