ஆஸ்கர் விருதை முதல்முறையாக வென்ற நடிகை சோய் சல்டானா, ‘நான் புலம்பெயர்ந்த பெற்றோரின் பெருமைமிக்க குழந்தை’ என்று கூறியது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. zoe saldana oscar speech goes viral
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் 97வது ஆஸ்கர் விருது விழா இன்று (மார்ச் 3) நடைபெற்று வருகிறது.
இதில் சிறந்த துணை நடிகைக்கான விருது பட்டியலில், சோய் சல்டானா (Emilia Pérez), மோனிகா பார்பரோ (A Complete Unknown), அரியானா கிராண்டே (Wicked), மற்றும் இசபெல்லா ரோசெல்லினி (Conclave), ஃபெலிசிட்டி ஜோன்ஸ் (The Brutalist) ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்.

எனினும் பலரும் எதிர்பார்த்தது போலவே, ’எமிலியா பெரெஸ்’ திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை சோய் சல்டானா வென்றார். இது அவரது முதல் அகாடமி விருதாகும்.
முன்னதாக இந்த படத்திற்காக கோல்டன் குளோப்ஸ், பாஃப்டாக்கள், கிரிட்டிக்ஸ் சாய்ஸ் மற்றும் எஸ்ஏஜி விருதுகளையும் சல்டானா வென்றிருந்தார்.
உணர்ச்சிவசப்பட்ட நிலையில் மேடையேறிய சல்டானா, கடந்த ஆண்டு சிறந்த துணை நடிகைக்கான விருதை வென்ற டா’வைன் ஜாய் ராண்டால்ஃபிடம் இருந்து விருதை பெற்றார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், “என் அம்மா இங்கே இருக்கிறார். என் முழு குடும்பமும் இங்கே இருக்கிறது. இந்த கௌரவத்தால் நான் மகிழ்ச்சியடைகிறேன். ரீட்டா போன்ற ஒரு பெண்ணின் அமைதியான வீரத்தையும் சக்தியையும் அங்கீகரித்து, சக்திவாய்ந்த பெண்களைப் பற்றிப் பேசியதற்காக பெருமை செய்த ஆஸ்கர் அகாடமிக்கு நன்றி. என் சக போட்டியாளர்களே, நீங்கள் எனக்கு வழங்கிய அன்பும் ஒரு உண்மையான பரிசு, அதை நான் முன்னோக்கி செலுத்துவேன்.
என் பாட்டி 1961 இல் இந்த நாட்டிற்கு வந்தார். கனவுகள், கண்ணியம் மற்றும் கடின உழைப்பு கொண்ட புலம்பெயர்ந்த பெற்றோரின் பெருமைமிக்க குழந்தை நான்” இதனைக் கேட்டதும் அரங்கில் இருந்த அனைவரும் ஒட்டுமொத்தமாக கைதட்டி அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.
அமெரிக்காவில் கடந்த ஜனவரியில் இரண்டாவது முறையாக அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது முதல், புலம்பெயர் மக்களை நாட்டை விட்டு வெளியேற்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
பல்வேறு சமூக மக்களை கருத்தில் கொண்டு அதிகாரப்பூர்வ மொழியாக பல்வேறு மொழிகள் இருந்த நிலையில், சமீபத்தில் ஆங்கிலத்தை அமெரிக்காவின் ஒற்றை மொழியாக அறிவித்தார்.
இந்த நிலையில் சல்டானா ஆஸ்கர் மேடையில் அவரது பேச்சு கவனம் பெற்றுள்ளது.

தொடர்ந்து மேடையில் அவர், “அகாடமி விருதை பெறும் டொமினிகன் வம்சாவளியைச் சேர்ந்த முதல் அமெரிக்கர் நான். நான் கடைசியாகவும் இருக்க மாட்டேன் என்று எனக்குத் தெரியும்.
ஸ்பானிஷ் மொழியில் பாடவும் பேசவும் வாய்ப்பு கிடைத்த ஒரு பாத்திரத்திற்காக எனக்கு விருது கிடைப்பது உண்மை, என் பாட்டி, அவர் இங்கே இருந்திருந்தால், அவர் மிகவும் மகிழ்ச்சியடைவார்.
இவ்வளவு நாள் ’எங்கிருந்து வருகிறேன்’ என்பது பற்றி நான் ஒருபோதும் கேள்வி கேட்கப்பட்டதில்லை, நான் எப்படிப் பேசுகிறேன் அல்லது என் குடும்பப்பெயர் என்ன என்பதைப் பொறுத்து மதிப்பிடப்பட்டதில்லை.
ஒவ்வொருவருக்கும் அவர்கள் விரும்பியபடி இருக்க உரிமை உண்டு, ‘எமிலியா பெரெஸ்’ என்பது உண்மையைப் பற்றியது மற்றும் அன்பைப் பற்றியது. நடிகர்களாகிய நாம், இப்போது முன்பை விட, அழகான மற்றும் சிந்திக்கத் தூண்டும் மற்றும் கலை சுதந்திரத்துடன் கதைகளைச் சொல்ல வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” என பேசினார்.
