‘ஜீரோ பிரசவ மரணம்’… விருதுநகர் மாவட்டம் சாதனை!

Published On:

| By Selvam

கடந்த ஓராண்டில் நடைபெற்ற 7,998 பிரசவங்களில், இறப்பு இல்லா பிரசவம் என்ற இலக்கை விருதுநகர் மாவட்டம் அடைந்து சாதனை படைத்துள்ளது.

தமிழ்நாட்டில் இப்படி பிரசவ கால உயிரிழப்புகளில் ஜீரோ மரணம் பதிவாவது இதுவே முதன்முறை. அந்த வகையில், இதுவொரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

விருதுநகரில் ஒரு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 10 அரசு மருத்துவமனைகள், 58 நகர, கிராமப்புற சுகாதார மையங்கள் இயங்கி வருகின்றன. மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு சராசரியாக 8,000 பிரசவங்கள் நடைபெறுகின்றன.

2022 ஏப்ரல் முதல் 2023 மார்ச் வரை மாவட்டத்தில் 8,620 பிரசவங்கள் நடைபெற்றன. இந்த கால கட்டத்தில் பிரசவத்தின்போது ஆறு இறப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. 2023-2024-ம் ஆண்டில் 7,998 பிரசவங்கள் நடந்துள்ளன. இதில், எந்த இறப்பு நிகழ்வுகளும் நடைபெறவில்லை. இச்சாதனை குறித்து பேசியுள்ள மருத்துவப் பணிகள் துணை இயக்குநர் யசோதாமணி,

“உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இரும்புச்சத்து குறைபாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பிரசவத்தின்போது சிக்கல் ஏற்படும். இவை தொடர்பாக தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மட்டுமே திருமணம் செய்ய வேண்டும் என்பது குறித்தும், உணவு பழக்கம் பற்றியும் எடுத்துரைக்கிறோம்.

சிகிச்சைக்கு வரும் பெண்கள் சுகாதார நிலையத்திலிருந்து வீட்டுக்கு திரும்பிச் செல்ல இலவச வாகன வசதி, சத்து குறைபாடு, இரும்புச் சத்து குறைபாடு உள்ள தாய்மார்களுக்கு ‘இரும்பு பெண்மணி’ திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்குகிறோம்.

‘விருகேர்’ என்ற ஆப் மூலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கர்ப்பிணிகளை கண்காணித்து வருகிறோம். இதுபோன்ற தொடர் செயல்பாடுகளால் இந்த ஆண்டு இறப்பு இல்லா பிரசவம் என்ற இலக்கை விருதுநகர் மாவட்டம் அடைந்துள்ளது. 2023-2024-ம் ஆண்டில் மொத்தம் நடந்துள்ள 7,998 பிரசவங்களில் 5,887 பிரசவங்கள் அதாவது 73.6 சதவிகிதம் அரசு மருத்துவமனைகளில் நடந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தை ‘மாதிரியாக’ கொண்டு அனைத்து மாவட்டங்களுக்கும் இது விரிவுபடுத்தப்படும் என தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

“தமிழ்நாட்டில் 99.9% பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடக்கின்றன. அதில், 59% பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளில் நடக்கின்றன. விருதுநகர் மாவட்டத்தில் 75% பிரசவம் அரசு மருத்துவமனைகளில் நடக்கின்றன.

அதனால், மருத்துவர்கள், செவிலியர்களின் கண்காணிப்பு அதிகமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் சுகப் பிரசவத்தை ஊக்குவிக்கிறோம். மருத்துவ காரணங்களுக்காக சிசேரியன் நடைபெறுவதைத் தவிர்க்க முடியாது. விருதுநகரில் தொடங்கிய இந்த மாற்றம் மற்ற மாவட்டங்களிலும் தென்படத் தொடங்கும்” என மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: பூசணி அப்பம்

டிஜிட்டல் திண்ணை:  தலைமைச் செயலகத்தில்  துணை முதல்வர் ரூம் ரெடி…   உதயநிதியின் செயலாளர் யார்? ஐஏஎஸ் போட்டி!

புரட்டாசில லட்டு சாப்பிடக்கூடாதா?: அப்டேட் குமாரு

காஷ்மீர் மக்களை கஷ்டப்பட விட மாட்டேன் : மோடி பிரச்சாரம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share