இந்தி தெரியாது போடா முதல்…கருப்பு திராவிடன் வரை யுவனின் அரசியல்!

Published On:

| By Selvam

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் சங்கர் ராஜா. இன்று அவருக்கு 43-வது பிறந்தநாள்.

இசையமைப்பாளராக இருந்தாலும் இந்தி எதிர்ப்பு உள்ளிட்ட அரசியல் ரீதியாக எதேனும் பிரச்சினைகள் எழும்போது அதற்கு தன் பாணியில் அமைதியாக பதிலடி கொடுப்பவர் யுவன்.

yuvan shankar raja

கடந்த 2020ஆம் ஆண்டு ஆயுஷ் அமைச்சகம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் இந்தி தெரியாதவர்கள் வெளியே போகலாம் என்று ஆயுஷ் அமைச்சக செயலாளர் கூறியது பெரும் சர்ச்சைக்குள்ளானது.

இதனால் இந்தி தெரியாது போடா என்ற ஹேஷ்டாக் ட்விட்டரில் ட்ரெண்டானது. தமிழகத்தில் அனைவரும் இந்தி தெரியாது போடா, தமிழ் பேசும் இந்தியன் என்ற வாசகங்கள் அடங்கிய டி ஷர்ட் அணிந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

அப்போது யுவன் சங்கர் ராஜா மெட்ரோ திரைப்படத்தில் நடித்திருந்த நடிகர் ஷிரிஷ் ஆகியோர் அணிந்திருந்த டீ சர்ட் இணையத்தில் வைரலானது.

யுவன் சங்கர் ராஜா அணிந்திருந்த டீ சர்ட்டில், “நான் ஒரு தமிழ் பேசும் இந்தியன்” என்ற வாசகமும், ஷிரிஷ் அணிந்திருந்த டீ சர்ட்டில் “இந்தி தெரியாது போடா” என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது.

இதன் மூலம் இந்தி திணிப்பிற்கு எதிரான தனது நிலைப்பாட்டை யுவன் சங்கர் ராஜா தெரிவித்திருந்தார்.

யுவனைத் தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் சாந்தனு ஆகியோரும் இந்தித் திணிப்பிற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய டீ சர்ட் அணிந்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

yuvan shankar raja

கடந்த ஏப்ரல் மாதம் யுவன் சங்கர் ராஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு டீ சர்ட் மற்றும் வேட்டி அணிந்தபடி புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்தார்.

அதில், “கருப்பு திராவிடன்…பெருமைமிகு தமிழன்” என்று பதிவிட்டிருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

யுவன் குறித்து கருத்து தெரிவித்த அண்ணாமலை, “யுவன் சங்கர் ராஜாவை விட நான் கருப்பு.

என்னை விட கருப்பு தமிழன், கருப்பு திராவிடன் யாருமில்லை. அவர் சாதாக் கருப்பு என்றால், நான் அண்டங்காக்கா கருப்பு” என்றார்.

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், “யுவன் சங்கர் ராஜா கூறுவது சிறுபிள்ளைத்தனமாக உள்ளது.

எருமை மாடு கூட கருப்பாகத் தான் உள்ளது. அது திராவிடனா?” என்று காட்டமாக விமர்சித்திருந்தார்

சமீபத்தில் வெளியான மோடியும் அம்பேத்கரும் என்ற புத்தகத்திற்கு இசைஞானி இளையராஜா முன்னுரை எழுதியிருந்தார்.

அதில் அவர் பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு எழுதியிருந்தார்.

இது அரசியல் அரங்கில் பெரிதும் பேசப்பட்டது. தனது தந்தைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தான்,

கருப்பு திராவிடன் பெருமைக்குரிய தமிழன் என்று யுவன் சங்கர் ராஜா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதாக கருத்துக்கள் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

செல்வம்

யுவன் பிறந்த சந்தோஷத்தில் உருவான பாடல்: மனம் திறந்த இளையராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share