கோவை பெரிய கடைவீதி காவல் நிலையத்துக்குள் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவையில் பெரிய கடை வீதி காவல் நிலையத்திற்குள் நேற்று ஆகஸ்ட் 5-ந் தேதி இரவு 11 மணி அளவில் புகார் கொடுக்க வந்த இளைஞர் ஒருவர், முதலாவது மாடியில் உள்ள க்ரைம் உதவி ஆய்வாளர் அறைக்குச் சென்று அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இன்று காலையில் வழக்கம் போல் பணிக்கு வந்த போலீசார் பார்க்கும் போது தூக்கு போட்ட நிலையில் சடலம் இருப்பது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து உடலை மீட்ட போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் தூக்கிட்டு தற்கொலை செய்தவர், கோவை பேரூர் சாமி செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜா (எ) அறிவொளி ராஜா என தெரியவந்துள்ளது. தம்மை 25 பேர் கொலை செய்ய முயற்சிப்பதாக நேற்று புகார் கொடுக்க காவல் நிலையத்துக்கு வந்தவர் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
தற்கொலை செய்து கொண்ட ராஜா, திருமணம் ஆகாதவர்; சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என போலீசாரிடம் குடும்பத்தினர் தெரிவித்திருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்
