குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்தில் தனது மகனின் பிறந்தநாள் விழாவின் போது இளம் தாய் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெஞ்சை பதற வைக்கும் இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதிர்ச்சியூட்டும் அந்த வீடியோ இப்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
வல்சாத் மாவட்டத்தில் ஐந்தாவது பிறந்தநாள் கொண்டாடிய சிறுவன் கௌரிக், தனது தாயார் யாமினி பென் மற்றும் தந்தையுடன் மேடையில் குதூகலமாக இருந்தார்.
அப்போது திடீரென யாமினி பென் மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவருக்கு உதவி செய்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், பரிசோதித்த மருத்துவர்கள் யாமினிபென் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இது தொடர்பாக வெளியான சிசிடிவி காட்சிகளில், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் டிஜேயின் இசைக்கு நடனமாடுவதைக் காணலாம். பிறந்த நாள் கொண்டாடும் சிறுவனின் தாயார் யாமினிபென் மற்றும் அவரது தந்தை ஆகியோர் மேடையில் மகிழ்ச்சியுடன் இருந்தனர்.
திடீரென்று, யாமினி பென் தனது கணவரின் தோளில் தலை சாய்த்து மேடையில் சரிந்தார். இந்த அதிர்ச்சி சம்பவத்தை தொடர்ந்து நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.
சமீப ஆண்டுகளில், நாட்டில் இதய நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நடைப்பயிற்சி, நடனம் அல்லது ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது கூட பலரும் மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் இப்போது அதிகமாகியுள்ளது. முன்னதாக, மாரடைப்பு என்பது பொதுவாக 50-65 வயதிற்குட்பட்டவர்களிடையே பரவலாக காணப்பட்டது, ஆனால் சமீபத்தில், இந்த பிரச்சினை 20 முதல் 40 வயதுடையவர்களையும் கணிசமாக பாதிக்க ஆரம்பித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ்: பின்பாக்கெட்டில் கனமான பர்ஸ் வைப்பவரா நீங்கள்?
டாப் 10 நியூஸ் : ஜம்மு காஷ்மீர் முதற்கட்ட தேர்தல் முதல் புதுச்சேரியில் பந்த் வரை!
“ஸ்டாலின் என்றாலே உழைப்பு” – ஏஐ தொழில்நுட்பத்தில் கலைஞர் உரை!

