இன்றைய டிஜிட்டல் யுகத்தில், வாட்ஸ்அப்பில் நூற்றுக்கணக்கான காண்டாக்ட்ஸ், இன்ஸ்டாகிராமில் ஆயிரக்கணக்கான ஃபாலோவர்ஸ் என நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் அதிக அளவில் இணைக்கப்பட்டுள்ளோம் (Highly Connected). ஆனால், இவ்வளவு இணைப்புகள் இருந்தும், முன்னெப்போதையும் விட இன்றைய இளைஞர்கள் அதிக தனிமையை உணர்கிறார்கள் என்கிறது ஒரு புதிய ஆய்வு.
குறிப்பாக, “நன்கு படித்த இளம் பெண்கள்” (Young, Educated Women) தான் இந்தத் தனிமைத் துயரத்தை அதிகம் அனுபவிக்கிறார்கள் என்று Plos One என்ற அறிவியல் இதழில் வெளியான ஆய்வு முடிவு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
ஆய்வு சொல்லும் முரண் (The Paradox): பொதுவாக நண்பர்கள் இல்லாதவர்கள்தான் தனிமையை உணர்வார்கள் என்று நாம் நினைப்போம். ஆனால், இந்த ஆய்வு ஒரு விசித்திரமான முரணை முன்வைக்கிறது. 18 முதல் 29 வயதுக்குட்பட்ட படித்த பெண்களிடம், “அதிகப் படியான சமூகத் தொடர்புகள்” (High levels of connection) இருந்தாலும், அதே சமயம் அவர்களிடம் “அதிகப் படியான தனிமை உணர்வும்” (High levels of loneliness) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்திற்கு நடுவே இருந்தாலும் தனித்து விடப்பட்டதைப் போல உணர்கிறார்கள். இதற்கு என்ன காரணம்?
பெண்களின் எதிர்பார்ப்புகள் (Higher Expectations): ஆய்வாளர்களின் கூற்றுப்படி, நட்பின் மீது ஆண்கள் வைக்கும் எதிர்பார்ப்பை விட, பெண்கள் வைக்கும் எதிர்பார்ப்பு மிக அதிகம்.
- வெறுமனே “ஹாய், பாய்” சொல்வது அல்லது அரட்டை அடிப்பது பெண்களுக்குப் போதுமானதாக இல்லை.
- “என் நண்பர்கள் உண்மையிலேயே என்னை விரும்புகிறார்களா?”, “எனக்காக நேரம் ஒதுக்குகிறார்களா?”, “அவர் ஒரு நல்ல மனிதரா?” போன்ற ஆழமான கேள்விகளைப் பெண்கள் நட்பிற்குள் தேடுகிறார்கள்.
- ஆயிரம் பேர் பழகினாலும், இந்த ஆழமான புரிதல் (Genuine Connection) கிடைக்காதபோது, அவர்கள் தனிமையை உணர்கிறார்கள்.
வாழ்க்கை மாற்றங்கள் (Life Transitions): இளம் வயதில் ஏற்படும் துரித மாற்றங்களும் இதற்கு ஒரு முக்கியக் காரணம். படிப்பு முடிப்பது, வேலைக்காக வெளியூர் செல்வது, காதல் தோல்வி அல்லது பழைய நண்பர்கள் திருமணமாகிப் பிரிந்து செல்வது போன்ற தொடர் மாற்றங்கள் (Flux), அவர்களை ஒரு இடத்தில் நிலையாக வேரூன்ற விடுவதில்லை. ஒவ்வொரு முறையும் புதிதாகத் தொடங்குவது, பழைய நெருக்கத்தை இழக்கச் செய்கிறது.
தீர்வு என்ன? தனிமை என்பது ஒரு குறைபாடு அல்ல; பசி எடுத்தால் எப்படி உணவு தேவையோ, அதுபோல தனிமை உணர்வு வந்தால் “சமூகத் தொடர்பு தேவை” என்று நம் உடல் நமக்கு உணர்த்தும் ஒரு சிக்னல்.
- கரியர், பணம் என்று ஓடுவதைப் போலவே, “சமூக ஆரோக்கியத்திற்கும்” (Social Health) முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
- குறுஞ்செய்திகளை (Texting) விட, நேரில் சந்திப்பதும், போனில் பேசுவதும் தான் அந்தத் தனிமையை விரட்டும் மருந்துகள் என்று அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
மொத்தத்தில்… நட்பு என்பது எண்ணிக்கையில் இல்லை; அது தரத்தில் (Quality) இருக்கிறது என்பதை இந்த ஆய்வு ஆணித்தரமாக உணர்த்துகிறது.
