‘மீண்டும் அமைச்சராவீர்கள்’ : பொன்முடிக்கு அழகிரி தந்த நம்பிக்கை!

Published On:

| By Kavi

முன்னாள் அமைச்சர் பொன்முடியை, மு.க.அழகிரி இன்று(டிசம்பர் 23) சந்தித்து பேசினார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை தொடர்ந்து பொன்முடி அமைச்சர் பதவியை இழந்துவிட்டார்.

இந்த தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொன்முடி மேல்முறையீடு செய்யவுள்ளார். இதற்காக ஒரு மாதம் சென்னை உயர் நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.

இந்தசூழலில் சென்னை சைதாப்பேட்டையில் இருக்கும் பொன்முடியின் இல்லத்துக்கு சென்று, சக அமைச்சர்களும் மற்றும் திமுகவினரும் அவரை சந்தித்து ஆறுதல் சொல்லி வருகின்றனர்.

நேற்று ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் ஸ்டாலின் இல்லத்திற்கு சென்றார் பொன்முடி. அப்போது திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலினுடன் 15 நிமிடங்கள் பேசியதாகவும்,  உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது குறித்து ஆலோசித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில் தனது மகன் துரை தயாநிதியின் சிகிச்சைக்காக சென்னையிலேயே தங்கியுள்ள மு.க.அழகிரி, பொன்முடியை சந்தித்து பேசினார்.

அவரிடம் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற தவறுகளையும், அரசு தரப்பில் இன்னும் தனக்கு உதவிகள் செய்திருக்கலாம் என்றும் பொன்முடி தனது வருத்தத்தை அழகிரியிடம் வெளிப்படையாக பகிர்ந்ததாகவும், அவர் உச்ச நீதிமன்றத்தில் சரியான வழக்கறிஞரை வைத்து வாதாடுங்கள். நிச்சயம் நீங்கள் மீண்டும் அமைச்சராவீர்கள் என ஆறுதல் தெரிவித்ததாகவும் தகவல்கள் வருகின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

வெள்ள பாதிப்பு எதிரொலி: வட்டாட்சியர் அதிரடி மாற்றம்!

தோனியை இடித்துத்தள்ளிய வீரரை… அடம்பிடித்து வாங்கிய சென்னை… யாரு காரணம்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share