நவநாகரிக அடையாளங்களில் ஒன்றாக ஸ்மார்ட் வாட்ச் மாறிவிட்டது. நம் தினசரி வாழ்வின் ஓர் அங்கமாகிவிட்ட இந்த ஸ்மார்ட் வாட்ச் என்பது இப்போது மணி பார்ப்பதற்கு மட்டுமே அல்ல. அது ஆரோக்கியத்தில் அக்கறை காட்டும் கருவியாக மாறி ஆச்சரியமான பல வேலைகளைச் செய்கிறது.
நவீன வசதிகள் காரணமாகவும், வேலையின் தன்மை காரணமாகவும் இன்று உடல்ரீதியான செயல்பாடுகளும் போதுமான அளவில் இல்லை. இதன் எதிரொலியாகவே வாழ்வியல் நோய்களும் (Lifestyle diseases) அதிகரித்து வருகின்றன. உடல் பருமன், ரத்த அழுத்தம், நீரிழிவு, இதயம் தொடர்பான பிரச்சினைகள், புற்றுநோய் போன்ற பல சுகாதார அச்சுறுத்தல்கள் இன்று நம்மை நோக்கியுள்ளன. இப்படி ஒரு சூழலில் நம்முடைய உடல்நிலை எந்தளவில் இருக்கிறது என்பதை மேலோட்டமாகக் கண்காணிக்க ஸ்மார்ட் வாட்ச் உதவிகரமாக இருக்கும்.
ஒரு நாளில் 10,000 அடிகளாவது நடப்பது ஆரோக்கியத்துக்கு நல்லது. இதை அறிந்துகொள்ள ஸ்மார்ட் வாட்ச் பயன்படுகிறது. இன்று நம் இலக்கை எட்டிவிட்டோம் என்று ஒருநாள் தெரியும். மற்றொரு நாள் இன்று போதுமான ஸ்டெப்ஸ் நடக்கவில்லை என்பது புரியும். அதற்கேற்றாற்போல அதற்கடுத்த நாளைத் திட்டமிடுவோம். இதேபோல் நம் இதயத் துடிப்பைக் கண்காணிக்கவும், அதன் சீரான தன்மையைத் தெரிந்துகொள்ளவும் ஸ்மார்ட் வாட்ச் உதவுகிறது.
உதாரணமாக, நம் இதயத்தில் அசாதாரணமான இதயத்துடிப்பு (Atrial fibrillation) ஏற்பட்டால் அது பக்கவாதத்துக்கு வழிவகுக்கும் அபாயம் உண்டு. வயதாகும்போது இந்த அசாதாரண இதயத்துடிப்பு பிரச்னை ஏற்படும் சாத்தியம் அதிகமாகும். ஸ்மார்ட் வாட்ச்சின் மூலம் சீரற்ற இத்தகைய இதயத்துடிப்பை எச்சரிக்கையாக முன்னரே உணர முடியும். இதுபோல் ஆரோக்கியரீதியாக பல நன்மைகள் ஸ்மார்ட் வாட்ச்சால் உண்டு. சில வாட்ச்சுகளில் ரத்த அழுத்த அளவைக்கூட பார்க்க முடியும். உணவின் கலோரியைக் கணக்கிட முடியும்.
தொழில்நுட்பம் வளர வளர எதிர்காலத்தில் ஸ்மார்ட் வாட்ச்சின் பயன்பாடுகள் இன்னும் அபாரமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கலாம். எத்தனை மணி நேரம் தூங்குகிறோம் என்ற நம் தூக்கத்தின் நேரத்தை ஸ்மார்ட் வாட்ச்சின் மூலம் கண்காணிக்கிறோம். வயதானவர்களுக்குக் கீழே விழுவது பெரிய பிரச்சினையாக இருக்கும். இதுபோன்ற கீழே விழுவதைத் தவிர்க்கவும் ஸ்மார்ட் வாட்ச் பயன்படும்.
மன அழுத்தம் இன்று பெரிய சிக்கலாக மனித சமூகத்துக்கு உள்ளது. ஸ்மார்ட் வாட்ச்சினால் நம் மன அழுத்த அளவைத் தெரிந்துகொள்ளவும் முடியும். மொத்தமாகப் பார்த்தால் ஸ்மார்ட் வாட்ச் என்பதை வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.
இந்த நிலையில்… “சிலருக்கு ஸ்மார்ட் வாட்ச் பயன்பாட்டால் சருமத்தில் எரிச்சல், அலர்ஜி உண்டாகலாம். அதேபோல் இதில் இருக்கும் இன்னொரு நெகட்டிவ்வான விஷயம், நம் ஆரோக்கியம் குறித்த தனிப்பட்ட தகவல்கள் திருடுபோக வாய்ப்பு உண்டு. ஏனெனில், தொடர்ச்சியாக நம் தகவல்கள் எங்கேயோ சேமிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. எனவே, இதில் பிரைவசியை உறுதி செய்துகொள்வது முக்கியமானது.
ஸ்மார்ட் வாட்ச் பயன்பாடு காரணமாகவே ஒருவருக்கு மனப்பதற்றம், கவலை உண்டாகவும் வாய்ப்பு உண்டு. ஏனெனில், நம் உடல் ஆரோக்கியம் குறித்த தகவல்கள் வந்துகொண்டே இருக்கும். உதாரணமாக… இன்று 10,000 அடிகள் நடந்துவிட்டோமோ என்று சிலர் பார்த்துக் கொண்டே இருப்பார்கள். இல்லாவிட்டால் கவலை உண்டாகும். இதுபோன்ற பிரச்னையும் (Obsession) ஸ்மார்ட் வாட்ச்சினால் ஏற்படலாம்.
எல்லோரும் இதை 24 மணி நேரமும் அணிந்திருப்பதில்லை. காலையில் அலுவலகத்துக்குக் கிளம்பும்போது அணிந்துகொண்டு, இரவு வீட்டுக்கு வந்த பிறகு கழற்றி வைப்பதாக இருக்கலாம். நீங்கள் கழற்றி வைத்திருக்கும்போது தகவல்கள் கிடைக்காமல் போகும். மற்றபடி ஸ்மார்ட் வாட்ச் பயன்பாட்டில் உங்கள் சௌகர்ய உணர்வுதான் முக்கியமானது’’ என்கிறார்கள் பொதுநல மருத்துவர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டிஜிட்டல் திண்ணை: கூட்டணிக் குடைச்சல்… தனித்தே போட்டியிடணும்! பெருகும் திமுக நிர்வாகிகள் குரல்!
நைட்டு நடந்தா நாய் கடிக்கும்ல : அப்டேட் குமாரு
”தலைவருடன் நடிக்க காத்திருக்கிறேன்” : நாகார்ஜூனா ஹேப்பி!
பேராசிரியர்கள் முறைகேடு ஆட்சி திறனின்மையை காட்டுகிறது : சீமான் குற்றச்சாட்டு!