ஜெயிலர் படத்தை பார்க்க உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வீடு தேடி சென்று ரஜினிகாந்த் அழைத்தும் வராதவர், தனது கட்சி ஆதரவாளரும், அவ்வப்போது சினிமா, அரசியல் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வரும் நடிகை கங்கனா ரனாவத் நாயகியாக நடித்துள்ள படத்தை பார்த்துள்ளார்.
கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகியுள்ள `Tejas’ திரைப்படம் இந்தியில் கடந்த அக்டோபர் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருந்தது.

படத்தை சர்வேஷ் மேவாரா இயக்கியுள்ளார். ராணுவத்தில் போர் விமானியாக இருக்கும் ஒரு பெண்ணின் வீரம், துணிச்சல், கண்ணீர் உள்ளிட்டவற்றைச் சொல்லும் திரைப்படமான இது இந்தி பேசும் மாநிலங்களில் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்த்த நிலையில் படத்திற்கு குறைந்தபட்ச ஓப்பனிங் கூட கிடைக்கவில்லை.
முதல் காட்சிக்கு படம் பார்க்க பார்வையாளர்கள் வராததால் பல திரையரங்குகளில் முதல் காட்சிகளை ரத்து செய்ய நேரிட்டது என்று திரையரங்க உரிமையாளர்கள் பகிரங்கமாக தெரிவித்திருந்தனர். கங்கனா ரனாவத் திரையரங்குகளுக்கு வந்து படம் பார்க்குமாறு தனது x தளத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார். இருந்தபோதிலும் திரையரங்குகளில் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை.

இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தின் முதல்வரான யோகி ஆதித்யநாத், கங்கனா ரணாவத் மற்றும் படக்குழுவினர்களுடன் லக்னோவிலுள்ள லோக்பவன் ஆடிட்டோரியத்தில் படம் பார்த்தார்.
பத்திரிகையாளர்களிடம் பேசிய கங்கனா, “யோகி ஆதித்யநாத் படத்தைப் பார்க்கும்போது ரொம்பவும் எமோஷனாகி கண் கலங்கிவிட்டார். இது ஒரு பெண்ணின் வீரத்தையும், துணிச்சலையும் பற்றிப் பேசும் படம். எல்லோரும் பார்க்க வேண்டிய திரைப்படம்” என்றார். இதற்கு முன் கங்கனா, இப்படத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கும் பிரத்யேகமாக டெல்லியில் திரையிட்டு காண்பித்தது குறிப்பிடத்தக்கது.
இராமானுஜம்
தமிழகத்திற்கு 2600 கன அடி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!
