�
கோலமாவு கோகிலா படத்தில் பாடல் எழுதியதற்காகக் கிடைக்கும் வருமானத்தை நா.முத்துக்குமார் குடும்பத்திற்கு வழங்கவுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.
நயன்தாரா நடிக்கும் கோலமாவு கோகிலா படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், அருண்ராஜா காமராஜ், இயக்குநர்கள் விக்னேஷ் சிவன், கெளதம் மேனன் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். இதில் இடம்பெற்றுள்ள ‘கல்யாண வயசு’ பாடலுக்கு அனிருத் இசையமைக்க, சிவகார்த்திகேயன் பாடல் வரிகளை எழுதியுள்ளார். இந்தப் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
இந்நிலையில், பாடல் எழுதியதற்காக தனக்கு கிடைக்கும் சம்பளத் தொகையை நா.முத்துக்குமாரின் குடும்பத்துக்கு வழங்க முடிவு செய்துள்ளார் சிவகார்த்திகேயன்.
இதற்குக் காரணம், சிவகார்த்திகேயன் கதாநாயகனாக அறிமுகமான ‘மெரினா’ படத்திற்கு நா.முத்துக்குமார் 3 பாடல்களை எழுதியிருந்தார். அதற்கு நன்றி செலுத்தும் விதமாகவே இதைச் செய்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.
மேலும், அவர் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் இடம்பெற்ற தந்தையின் பாசத்தை எடுத்துரைக்கும், ‘தெய்வங்கள் எல்லாம்’ எனும் பாடலும் சிவகார்த்திகேயனுக்கு ரொம்பவே பிடித்தமான பாடல் ஆகும்.�,