2023 ஒரு பார்வை : மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் முதல் எம்.பி.க்கள் சஸ்பெண்ட் வரை – என்ன நடந்தது?

Published On:

| By Kavi

wrestlers protest to mp suspend 2023

wrestlers protest to mp suspend 2023

2023 ஆம் ஆண்டில் இந்திய அளவில் நடந்த முக்கிய நிகழ்வுகளை இந்த செய்திக்குறிப்பில் பார்க்கலாம்.

2023ஆம் ஆண்டு இன்னும் 6 தினங்களில் நிறைவடையவுள்ளது. 2024ஆம் ஆண்டை வரவேற்க காத்திருக்கிறோம். 2023ம் ஆண்டில் பல சாதனையான மற்றும் மறக்கமுடியாத நிகழ்வுகள் நடந்துள்ளன. இந்த சம்பவங்களை தொகுத்து வழங்குகிறோம்.

மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம்!

பாலியல் குற்றச்சாட்டில், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்த பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்ய வலியுறுத்தி 2023 ஜனவரியில், மல்யுத்த வீரர்களான பஜ்ரங் புனியா, வினேஷ் போகட் மற்றும் சாக்ஷி மாலிக் ஆகியோர் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தை தொடங்கினர். வருடம் முழுக்க போராடினாலும், இவர்களது போராட்டத்துக்கு ஒரு தீர்வு கிடைக்கவில்லை. மல்யுத்த சம்மேளனத்தின் புதிய தலைவராக சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டார். இவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு நெருக்கமானவர். இவரது தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சாக்‌ஷி மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் மல்யுத்த விளையாட்டிலிருந்து விலகினர்.

வீரர்களின் ஓராண்டுகால போராட்டத்துக்கு இறுதி முடிவாக இந்திய மல்யுத்த சம்மேளனத்தை மத்திய அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது.

மணிஷ் சிசோடியா

ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவரும், துணை முதல்வருமான மணிஷ் சிசோடியா டெல்லி மதுபான கொள்கை வழக்கில் சிபிஐ-ஆல் கைது செய்யப்பட்டார். உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வழக்கு குறித்து சிபிஐயும், அமலாக்கத் துறையும் தனித்தனியாக விசாரித்து வருகிறது. ஏறத்தாழ ஒரு வருடமாக சிறையில் இருக்கும் சிசோடியாவின் நீதிமன்ற காவல் வரும் ஜனவரி 10ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதே வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி சஞ்சய் சிங்கும் கைதாகி சிறையில் உள்ளார். அதுபோன்று விசாரணைக்கு ஆஜராக சொல்லி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை மூன்று முறை சம்மன் அனுப்பியுள்ளது.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல்

மோடி சமுதாயம் பற்றி அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு கடந்த மார்ச் மாதம் சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. சூரத் நீதிமன்றம் உத்தரவை எதிர்த்து ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்ததால் மீண்டும் அவருக்கு எம்.பி.பதவி வழங்கப்பட்டது.

அதிக மக்கள் தொகை!

மக்கள் தொகையில் முதலிடத்தில் இருக்கும் சீனாவை, இந்தியா இந்த ஆண்டு பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடிக்கும் என்று இந்த ஆண்டு ஏப்ரலில் ஐ.நா அறிவித்தது. இந்திய மக்கள் தொகை 142.86 கோடியாக இருக்கும். அதேநேரத்தில், சீன மக்கள் தொகை 142.57 கோடியாக இருக்கும் என்று தெரிவித்தது.

காங்கிரஸ் வெற்றி!

மே மாதம் நடைபெற்ற கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று,  மீண்டும் ஆட்சியை பிடித்தது. கர்நாடக முதல்வராக சித்தராமையா பொறுப்பேற்றார்.

மணிப்பூர் கலவரம்!

கடந்த மே மாதம் மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி, குகி சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினை வன்முறையாக மாறியது. குகி இன பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்ட கொடூரம் நாட்டையே உலுக்கியது. இந்த வன்முறையில் உயிரிழந்த 87 பேரின் உடல்கள் 8 மாதங்களுக்கு பிறகு இந்த மாதம் 21ஆம் தேதிதான் எரிக்கப்பட்டன. இன்னும் முழுமையாக மணிப்பூரில் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை.

புதிய நாடாளுமன்றம் திறப்பு!

சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் ஒரு பகுதியாக மக்களவையில் 888 இருக்கைகளுடன், மாநிலங்களவைக்கு 384 இருக்கைகளுடன் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டடத்தை  மே 28ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

ஒடிசா ரயில் விபத்து!

கடந்த ஜூன் 2 ஆம் தேதி ஒடிசா அருகே மிகப்பெரிய ரயில் விபத்து ஏற்பட்டது. சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில் பாலசோர் பகுதியில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி தடம் புரண்டது. அந்த நேரத்தில் பெங்களூருவில் இருந்து ஹவுரா  நோக்கி எதிர் திசையில் வந்து கொண்டிருந்த ரயில் கோரமண்டல் ரயிலின் இருந்து சிதறிய பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 296 பேர் உயிரிழந்தனர்.

இந்தியா கூட்டணி!

2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக இந்தியா முழுவதும் உள்ள பல எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. இந்த கூட்டணியின் முதல் கூட்டம் பிகார் மாநிலம் பாட்னாவில் கடந்த ஜூன் 23ஆம் தேதி நடைபெற்றது. இரண்டாவதாக ஜூலையில் பெங்களூருவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தான் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு “இந்தியா கூட்டணி” என பெயர் வைக்கப்பட்டது. மூன்றாவதாக மும்பையிலும், 4 ஆவதாக டெல்லியிலும் என இதுவரை இந்தியா கூட்டணி இந்த ஆண்டு 4 முறை கூட்டத்தை நடத்தியுள்ளது.

பாரத் vs இந்தியா

எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு ‘இந்தியா’ என்று பெயர் வைத்த நிலையில், இந்தியாவின் பெயரை ‘பாரத்’ என பெயர் மாற்றம் செய்து குடியரசுத் தலைவர் மாளிகை அனுப்பிய ஜி20க்கான அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள் இந்தியா என்று பெயர் வைத்ததால் பாஜகவினர் இந்தியா என்ற வார்த்தையை சொல்வதற்கே பயப்படுகிறார்கள் என்று எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் விமர்சித்தனர்.

சந்திரயான் -3!

நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க அமெரிக்க, ரஷ்யா ஆகிய நாடுகள் முயற்சித்த நிலையில், இந்தியா சந்திரயான் 3 விண்கலம் மூலம் அந்த சாதனையை படைத்தது. ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டரை தரையிறக்கி வரலாற்றில் இடம் பிடித்தது.

ஜி 20 மாநாடு!

இந்த ஆண்டு செப்டம்பரில், ஜி 20 மாநாட்டை இந்தியா தலைமை ஏற்று நடத்தியது. இந்த மாநாட்டில் ஆப்பிரிக்க யூனியன் இந்த ஜி20 மன்றத்தில் நிரந்தர உறுப்பினரானது. இந்த மாநாட்டில் வெளிநாட்டுத் தலைவர்கள், இந்திய அரசியல் தலைவர்கள் சந்தித்துக்கொண்டனர். அந்தவகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார்.

இந்தியாவை உலுக்கிய விபத்து!

உத்தரகாண்ட் மாநிலம் சில்க்யாராவில் சுரங்க வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்ற போது கடந்த நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி அன்று சுரங்கத்தின் பாறைகள் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். பல்வேறு தடங்கல்களை தாண்டி மீட்பு பணிகள் நடைபெற்றன. சுமார் 17 நாட்களுக்கு பிறகு நவம்பர் 28ஆம் தேதி இரவு 41 தொழிலாளர்களும் உயிருடன் மீட்கப்பட்டனர். 41 பேரும் உயிருடன் வர வேண்டும் என ஒட்டுமொத்த இந்தியாவே எதிர்பார்த்து காத்திருந்தது மறக்கமுடியாத நிகழ்வாகும்.

5 மாநில தேர்தல்!

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்பட்ட சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம், மத்தியப் பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் கடந்த நவம்பரில் தேர்தல் நடைபெற்றது. இதில் 3 மாநிலங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது பாஜக. தென்மாநிலங்களில் கர்நாடகாவை தொடர்ந்து தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. மிசோரத்தில் மாநில கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம் வெற்றி பெற்றது.

wrestlers protest to mp suspend 2023

நாடாளுமன்றம் தாக்குதல்!

கடந்த டிசம்பர் 13ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மக்களவையில் குளிர்கால கூட்டத்தொடர் நடந்துகொண்டிருந்த போது இருவர் அத்துமீறி உள்ளே நுழைந்து எம்.பி.க்கள் மீது வண்ண புகை குண்டுகளை வீசினர். நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி தொடர் அமளியில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் மனோரஞ்சன், சாகர் ஷர்மா, நீலம், அமோல் ஷிண்டே உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

wrestlers protest to mp suspend 2023

எம்.பி.க்கள் சஸ்பெண்ட்!

நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பதிலளிக்க வலியுறுத்தி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் வரலாற்றிலேயே இல்லாத வகையில் குளிர்கால கூட்டத்தொடரில் 143 மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

wrestlers protest to mp suspend 2023

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

சென்னை – நெல்லை வந்தே பாரத்: நாகர்கோவில் வரை நீட்டிப்பு!

இந்தி பேசுபவர்கள்… வைரலாகும் வீடியோ: தயாநிதிமாறன் ரியாக்‌ஷன் என்ன?

wrestlers protest to mp suspend 2023

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share