உலகக்கோப்பையில் இந்த முறை இந்தியா வெற்றி பெறாவிட்டால், அதற்காக 12 வருடங்கள் காத்திருக்க வேண்டும் என ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை போட்டிகள் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளன. லீக் சுற்று போட்டிகள் முடிவுற்ற நிலையில், புள்ளி பட்டியலின் அடிப்படையில் இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 4 அணிகள் செமி பைனலுக்கு முன்னேறியுள்ளன.
இதில் முதலாவது செமி பைனல் வருகின்ற புதன்கிழமை (நவம்பர் 15) நடைபெறவுள்ளது. இதில் இந்தியா, நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இரண்டாவது செமி பைனல் வியாழக்கிழமை (நவம்பர் 16) நடைபெறவுள்ளது. இதில் தென் ஆப்பிரிக்கா அணி ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்கிறது. இறுதிப்போட்டி வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 19) நடைபெறுகிறது.
நான்கு அணிகளுமே சமமான வலிமையில் இருப்பதால் இந்த செமி பைனல் போட்டிகளில் எந்த இரண்டு அணிகள் முன்னேறி, இறுதி போட்டிக்கு செல்லும் என்பது தான் தற்போது கிரிக்கெட் ரசிகர்களின் மத்தியில் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி இந்த முறை கோப்பையை நாம் தவற விட்டால் அதற்காக 12 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “இந்திய அணி தற்போது அதன் உச்சக்கட்ட பார்மில் இருக்கிறது. நாம் கடைசியாக உலகக்கோப்பையை வென்று 12 ஆண்டுகள் ஆகின்றன. இந்த முறை நாம் கோப்பையை வெல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.
தற்போது இந்திய அணி ஆடும் முறைக்கு நிச்சயம் கோப்பையை வெல்ல முடியும். இப்போது நாம் தவறவிட்டால் மீண்டும் ஒரு 12 ஆண்டுகள் நாம் காத்திருக்க வேண்டும். ஏனெனில் இப்போது இந்திய அணியில் உச்சகட்ட பார்மில் இருக்கும் வீரர்கள் அடுத்தடுத்து ஓய்வு பெற்று விடுவார்கள். இளம் வீரர்கள் முதிர்ச்சி மற்றும் அனுபவத்தை பெற்று சாதிப்பதற்கு நாட்களாகும்” என தெரிவித்துள்ளார்.
அதே நேரம் இந்திய அணி இந்த உலகக்கோப்பையை வென்று 10 வருடங்களாக ஐசிசி தொடரில் சந்தித்து வரும் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா? என்பதே ரசிகர்களின் அதிகபட்ச எதிர்பார்ப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
