கோவையில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அதிக பணம் தர மறுத்த வட மாநில தொழிலாளியை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக கொண்டாட மக்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில் கோவையில் பல இடங்களில் இந்து அமைப்புகள் சார்பிலும், தனியார் சார்பிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட உள்ளது.
கோவையை பொறுத்தவரை சரவணம்பட்டி பகுதியில் மில் ஒன்றில் பீகாரைச் சேர்ந்த பல இளைஞர்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர்.
அதே பகுதியில் வசிக்கும், அசோக், திலீப், தினேஷ் ஆகிய 3 பேரும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட பணம் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது பீகார் மாநில இளைஞர் விஜய குமார் ராய் 51 ரூபாய் கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் காசை தூக்கி எறிந்து விட்டு அதிக பணம் கேட்டு அவரை கடுமையாக தாக்கி விட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து வடமாநில தொழிலாளி விஜய்குமார் ராய் தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் தகவல் தெரிவித்தார். பின்னர், அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் உதவியுடன், சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகார் அடிப்படையில் கோவை கணபதி பகுதியை சேர்ந்த இளைஞர்கள் அசோக், திலீப், தினேஷ் ஆகிய 3 பேரை சரவணம்பட்டி போலீசார் கைது செய்தனர். விசாரணைக்கு பின் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
