கனவை நினைவாக்க உழைக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் ஆங்கிலப் புத்தாண்டு நாளை (ஜனவரி 1, 2023) கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (டிசம்பர் 31) வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆண்டொன்று போனால் – வயதொன்று கூடும் என்று வாழ்வதல்ல வாழ்க்கை. ஆண்டொன்று போனால் – வளர்ச்சி என்பது இன்னும் பல மடங்கு கூடும் என்று வாழ்வதுதான் வாழ்க்கை.
அந்த வகையில், கடந்த ஆண்டு என்பது தமிழ்நாட்டை பொறுத்தவரையில் அனைத்து துறைகளிலும் வளர்ச்சியும் எழுச்சியும் கொண்ட ஆண்டாகவே அமைந்திருந்தது.
அதற்கு, முந்தைய ஆண்டுகளில் நம்முடைய மாநிலம் சந்தித்த மந்த நிலையை நாம் மாற்றிக் காட்டினோம். மக்கள் வாழ்வு மீண்டும் வளம் பெறத் துவங்கியது.
இப்போது 2023ஆம் ஆண்டில் உங்கள் ஒவ்வொருத்தருடைய சமூக – பொருளாதார வளர்ச்சியையும் இன்னும் அதிகரிக்கும் ஆண்டாக அமைய, நானும் நமது அரசும் தொடர்ந்து பாடுபடுவோம்.

உங்கள் முகங்களில் மகிழ்ச்சியை பார்ப்பதுதான் எனக்கு முக்கியம். அதற்காகத்தான் நான் முதலமைச்சர் பதவியை ஒரு பெரும் பொறுப்பாகப் பார்த்து பணியாற்றி வருகிறேன்.
கடந்த ஓராண்டு காலத்தில் நமது அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு ஏராளமான – மகத்தான சாதனைகளை செய்திருக்கிறது. அதையெல்லாம் நான் பட்டியல்போட்டு சொல்ல வேண்டும் என்று அவசியம் இல்லை. அதனால் பயன்பெறக் கூடிய உங்களுக்கே அது நன்றாக தெரியும்.
உழைப்புக்குக் கிடைத்த சான்றிதழ்
ஆட்சிப் பொறுப்புக்கு வந்த அன்றைக்கே நான் சொன்னேன்: ’எனக்கு வாக்களித்தவர்கள் மகிழ்ச்சி அடைவது மட்டுமல்ல, வாக்களிக்கத் தவறியவர்களும் பாராட்டும் முதலமைச்சராக நான் செயல்படுவேன்’- என்று சொன்னேன். அப்படித்தான் செயல்பட்டு வருகிறேன்.
அரசு விழாவாக இருந்தாலும் – பொது நிகழ்ச்சியாக இருந்தாலும் எல்லா இடங்களிலும் மக்களாகிய உங்கள் அன்பை நான் உணர்கிறேன். நீங்கள் அளிக்கின்ற பாராட்டுகளை நான் பணிவோடு ஏற்றுக் கொள்கிறேன். அது நான் இன்னும் கவனமாக கூடுதலாக பணியாற்ற ஊக்கம் தருகிறது.
இது திராவிட முன்னேற்றக் கழக அரசை சேர்ந்தவர்களின் உழைப்புக்குக் கிடைத்த சான்றிதழ். ஒவ்வொரு நாளும் திட்டமிட்டு உழைத்ததால்தான் இந்த வெற்றி சாத்தியமாகியது. நினைத்துப் பார்க்கிறேன்…. நித்தமும் மக்களுக்காக நான் ஓய்வில்லாமல் உழைத்துக்கொண்டு இருக்கிறேன்.

ஒன்றிணைந்து வாழ வேண்டும்
திராவிட மாடல் ஆட்சியின் லட்சியம் என்பது கல்வியில், வேலைவாய்ப்பில், அறிவுத் திறனில், தொழில் வளர்ச்சியில், அனைவருக்குமான சமூக வளர்ச்சியில் தமிழ்நாடு – இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாக ஆவதுதான். அந்த லட்சியத்துக்காக என்னையே நான் ஒப்படைத்துக் கொண்டு செயல்படுவேன்.
இதற்குத் தமிழ்நாட்டு மக்களாகிய நீங்கள் அனைவரும் மனமார்ந்த ஒத்துழைப்பைத் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். சமூகநீதி மண்ணாக – மதச்சார்பற்ற மாநிலமாக – தமிழ்நாடு விளங்க தமிழக மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
நம்மிடையே வெறுப்புணர்வைத் தூண்டி, நம்மைப் பிளவுபடுத்தும் சாதிய – மதவாத சக்திகளுக்கு எப்போதும் நாம் இடமளிக்கக் கூடாது. மொழியால், இனத்தால், தமிழர்கள் என்ற உணர்வோடு ஒன்றிணைந்து வாழ வேண்டும். நல்லிணக்க மாநிலமாக இருந்தால்தான் சிறந்த மாநிலமாக ஆக முடியும்.
இன்றைய இளைய சமுதாயமானது படிப்பு – படிப்பு – படிப்பு என படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். உயரிய லட்சியங்களை அடைய கனவு காண வேண்டும். அந்த கனவை நினைவாக்க உழைக்க வேண்டும். அதில் வெற்றி பெற்று, நீங்கள் பெருமை அடைவதோடு, உங்க பெற்றோரையும் பெருமைப்படுத்த வேண்டும். ‘நான் முதல்வன்’- என்ற என்னுடைய கனவுத் திட்டத்தின் நோக்கமே அதுதான்.

புத்தாண்டே வருக! புது வாழ்வைத் தருக!
படிப்பைத் திசைதிருப்பும் பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகிவிடக் கூடாது. உடல்நலனுக்கும் மனநலனுக்கும் கேடான போதைப் பழக்கங்களுக்கு இளைய சமுதாயம் அடிமையாகிவிடக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். இளைய சக்தியின் மூலமாகத்தான் இணையற்ற மாநிலத்தை உருவாக்க முடியும்.
தன் பெண்டு, தன் பிள்ளை, சோறு, வீடு, சம்பாத்தியம், இவையுண்டு தானுண்டு என்று வாழக்கூடாது என்றார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். அப்படி இல்லாமல், அனைவரும் தங்களது குடும்பத்தையும் வளப்படுத்தி – சமூக வளத்துக்கும் பங்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
பொதுத் தொண்டாற்றுவதால் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு இணையாக வேறு எதுவும் இருக்க முடியாது. அந்த வகையில் கடந்த ஆண்டைப் போலவே வருங்காலமும் வசந்த காலமாக அமையட்டும். புத்தாண்டே வருக ! புது வாழ்வைத் தருக ! அனைவர்க்கும் எனது இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!” என முதல்வர் மு.க.ஸ்டாலின் அதில் தெரிவித்துள்ளார்.
ஜெ.பிரகாஷ்