இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி இன்று (ஜூலை 7) தன்னுடைய 42 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
இந்நிலையில், கேப்டன் கூல் என்று வர்ணிக்கப்படும் தோனியின் கோபம் குறித்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா பேசியுள்ளார்.
இது குறித்து TRS Clips யூடியூப் சேனலில் பேசிய இஷாந்த் சர்மா, “மஹி பாய்க்கு பல்வேறு திறமைகள் உள்ளன.
அதேபோன்று களத்தில் அமைதியாகவும், கூலாகவும் இருக்கும் அவர் கோபம் வந்தால் அடிக்கடி தவறான வார்த்தைகளை பயன்படுத்துவார். அதனை நான் நேரிலேயே கேட்டு இருக்கிறேன்.
ஐபிஎல் போட்டியாக இருந்தாலும் சரி, இந்திய அணியின் போட்டியாக இருந்தாலும் சரி எப்பொழுதுமே மஹிபாயை சுற்றி வீரர்கள் அமர்ந்திருப்பதை நீங்கள் பார்க்க முடியும்.
கிராமத்தில் மரங்களை சுற்றி நாம் நிழலுக்காக அமருவது போன்று அவரைச் சுற்றி எப்பொழுதுமே ஒரு கூட்டம் இருக்கும்” என்றார்.
தொடர்ந்து பேசிய இஷாந்த் சர்மா, “ஒருமுறை நான் பந்துவீசி முடித்த பிறகு மஹி பாய் என்னிடம் வந்து… நீங்கள் மிகவும் சோர்வாக இருக்கிறீர்களா? என்று கேட்டார்.
அதற்கு நானும் ஆமாம் என்று சொன்னேன். உடனே கோபப்பட்ட அவர் உனக்கு வயது ஆகிறது மகனே வெளியேறிவிடு என்று கூறினார்.
அது மட்டும் இல்லாமல் பீல்டிங்கின் போது நாம் பந்தை தவறவிட்டால் தோனி கோவப்படுவார். ஒருமுறை அவர் என்னிடம் பந்தை எறிந்த போது நான் அவரது கோபத்தை பார்த்தேன்.
இரண்டாவது முறையும் அவர் பந்தினை எறிந்த போது மேலும் வேகமாக என்னை நோக்கி எறிந்தார்” என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி குறித்து பகிர்ந்துள்ளார் இஷாந்த் சர்மா.
மு.வா.ஜெகதீஸ் குமார்
அமைச்சர் அறிமுகப்படுத்தியுள்ள Co-Op Bazaar App: என்ன விசேஷம்?
