நாடாளுமன்றம் மற்றும் மாநிலச் சட்டமன்றங்களில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்தக் கோரி, அரசியலமைப்புத் திருத்தத்திற்கான தனிநபர் மசோதாவை திமுக எம்.பி. வில்சன் தாக்கல் செய்துள்ளார்.
மக்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நேற்று தோல்வி அடைந்தது. இதற்கு ஆளும் பாஜகவை சேர்ந்தவர்கள் எதிர்க்கட்சிகளுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் திமுக எம்.பி வில்சன் மாநிலங்களவையில் ஒரு தனிநபர் மசோதாவை இன்று (ஏப்ரல் 18) தாக்கல் செய்துள்ளார்.
“மக்கள் தொகை கணக்கெடுப்பு அல்லது தொகுதி மறுவரையறைக்காகக் காத்திருக்காமல் மக்களவையில் தற்போதுள்ள 543 இடங்கள் உட்பட, சட்டமன்றங்களின் தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கையிலேயே இந்த 33% மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். தொகுதிகளை மறு ஒதுக்கீடு செய்ய வேண்டிய அவசியமில்லை” என்று அந்த மசோதாவில் முன்மொழிந்துள்ளார்.
மேலும் அதில், இத்தகைய இடஒதுக்கீடு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே என்று மட்டுப்படுத்தப்படாமல், அரசியலமைப்பு கட்டமைப்பின் ஒருங்கிணைந்த அங்கமாக, ஒரு நிரந்தரத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்.
மத்திய-மாநில அரசுகளுக்கு இடையிலான கூட்டாட்சி சமநிலையைப் பாதுகாக்கும் நோக்கில், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் தொகுதிகள் மறு ஒதுக்கீடு எதுவாக இருந்தாலும், அதற்கு குறைந்தபட்சம் மூன்றில் இரண்டு பங்கு மாநிலச் சட்டமன்றங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
தொகுதி மறுவரையறை மீதான தடையை 2051-ஆம் ஆண்டு வரை நீட்டிக்க வேண்டும்” என்றும் அந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மசோதா மீதான விவாதத்தை அனுமதிக்கக் கோரி, மாநிலங்களவை விதி 267-இன் கீழ் அவையின் தலைவருக்கு நோட்டீஸ் அளித்திருந்தார். எனினும் இதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இதுதொடர்பாக வில்சன் தனது எக்ஸ் பக்கத்தில், “மிக எளிதாகச் செய்திருக்க வேண்டிய ஒரு விஷயத்தை, பாஜக அரசு சிக்கலாக்கியுள்ளது. பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் எண்ணம் அவர்களுக்கு இல்லை என்பதையே இது காட்டுகிறது. பாஜக தலைமையிலான என்.டி.ஏ அரசு, ‘நாரி சக்தி’என்ற பெயரில் அரசியல் செய்யவும், தொகுதி மறுவரையறையைத் திருட்டுத்தனமாக உள்ளே புகுத்தவுமே விரும்புகிறது என்பது இதன் மூலம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகியுள்ளது” என்று விமர்சித்துள்ளார்.
