ஓடும் ரயிலில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மத்தியப் பிரதேசம் மாநிலம் கட்னியில் இருந்து சத்னா மாவட்டத்தில் உள்ள உன்செஹ்ரா வரை செல்வதற்காக 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் பயணி ரயிலில் நேற்று (டிசம்பர் 11) மாலை பயணம் செய்துள்ளார்.
அப்போது பகாரியா என்ற ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் நின்றது. அந்த நேரத்தில் பயணிகள் இல்லாமல் காலியாக இருந்த ரேவா வரை செல்லும் சிறப்பு ரயிலும் ரயில் நிலையத்தில் நின்றுள்ளது.
பயணிகள் ரயிலில் இருந்த பெண் கழிவறையை பயன்படுத்துவதற்காக சிறப்பு ரயிலில் ஏறியுள்ளார். அவர் சிறப்பு ரயிலில் உள்ள ஏசி பெட்டியின் கழிவறையை பயன்படுத்த சென்ற போது பயணிகள் ரயிலில் இருந்த ஒரு இளைஞரும் பின் தொடர்ந்து சென்றுள்ளார்.
பின்னர் ரயிலின் ஏசி பெட்டியின் கதவுகளை பூட்டிய இளைஞர், அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பகாரியா ரயில் நிலையத்தில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அடுத்த நிறுத்தமான மைஹர் நிலையத்தில் சுமார் இரவு 8 மணி அளவில் ரயில் நின்றதும் அந்த பெண், “தாகமாக உள்ளது. தண்ணீர் வேண்டும்” என்று கெஞ்சியுள்ளார்.
இதனால் இளைஞர் தண்ணீர் வாங்குவதற்காக ரயிலை விட்டு இறங்கிய உடன், அந்த பெண் தனது சேலை, செருப்பு, பேக் என அனைத்தையும் ரயிலிலேயே விட்டுவிட்டு கீழே இறங்கி ஓடி அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே போலீசிடம் நடந்தது குறித்து கூறியுள்ளார்.
இதனிடையே இளைஞர் தண்ணீர் பாட்டிலுடன் ரயிலுக்குள் ஏறியுள்ளார். ரயில்வே போலீஸ் இளைஞரை பிடிப்பதற்காக வந்த போது, அவர் உள்ளே இருந்தபடி கதவை பூட்டியுள்ளார். உடனே ரயில் புறப்பட்டு செல்ல ஆரம்பித்து விட்டது.
உடனே ரயில்வே போலீசும் மற்றொரு பெட்டியில் ஏறினார். மற்ற ரயில்வே போலீசாரும் சாலை வழியாக கைமா என்ற ரயில் நிலையத்தை அடைந்தனர். அங்கு அதிகாரிகள் பூட்டை உடைக்க முயன்றும் முடியவில்லை. எனவே அவர்கள் சிறப்பு ரயிலின் மற்றோரு பெட்டியில் பயணித்துள்ளனர். பின்னர் ரயில் ரேவா நிலையத்தில் நின்றதும் மெக்கானிக்கை அழைத்து வந்து பூட்டை உடைத்து இரவு 11.30 மணி அளவில் குற்றவாளியை கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் கூறுகையில், “இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் 22 வயதான கமலேஷ் குஷ்வாஹா. உத்தரப்பிரதேசத்தின் பண்டா மாவட்டத்தைச் சேர்ந்த இவர் பின்னர் சமீபத்தில் கட்னிக்கு குடிபெயர்ந்துள்ளார்.
இந்த சம்பவத்திற்கு முன் பயணிகள் ரயிலிலேயே கமலேஷ் அந்த பெண்ணிடம் பேசுவதற்கு முயற்சி செய்துள்ளார். அந்த பெண் சிறப்பு ரயிலில் ஏறும் போது கமலேஷ் பின் தொடர்ந்து வருவது அவருக்கு தெரியவில்லை. கமலேஷ் பின்னாள் இருந்து தாக்கிய உடன் அவர் கீழே விழுந்துள்ளார்.
இதனால் அவருக்கு தலையில் அடிப்பட்டுள்ளது. பின்னர் கமலேஷ் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அப்போது அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்துக் கூச்சலிட்டபோது, கமலேஷ் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்” என்று தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்து கமலேஷ் இன்று அதிகாலை 4 மணிக்கு சத்னாவுக்கு அழைத்து வரப்பட்டு, பின்னர் கட்னிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். கட்னி காவல் நிலையத்தில் கமலேஷ் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
– மோனிஷா
