அப்பளம் பொறிப்பதில் தகராறு: கணவரை கொன்ற பெண்ணுக்கு தண்டனை குறைப்பு!

Published On:

| By Kalai

Woman who killed her husband

அப்பளம் பொறித்து தருவதில் தாமதம் ஏற்பட்டதை கண்டித்த கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை  ஊற்றிய வழக்கில் மனைவிக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறை தண்டனையை குறைத்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கிருஷ்ணகிரியை சேர்ந்த அப்துல் ரசீத் என்பவருக்கும் அவரது மனைவி ஆயிஷாவிற்கும் அடிக்கடி சண்டை நிகழ்ந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 2012ம் ஆண்டு நவம்பர் மாதம் இரவு உணவின் போது, கணவர் அப்துல் ரசித், மனைவியிடம் அப்பளம் பொறித்து தருமாறு கேட்டுள்ளார்.

அது தாமதமாகவே, அப்துல் ரசீத் சண்டையிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனைவி ஆயிஷா, கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியுள்ளார்.

இதனையடுத்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரசித் 28  நாட்களுக்கு பின் உயிரிழந்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றம், மனைவிக்கு ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து ஆயிஷா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கு நீதிபதி நிர்மல் குமார் முன்பு இன்று(ஜனவரி 17) விசாரணைக்கு வந்த போது, மனைவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,

சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் யாரும் இல்லை எனவும், உயிரிழந்தவரின் உறவினர்கள் அளித்த சாட்சியின் அடிப்படையிலேயே தண்டனை அளிக்கப்பட்டதாகவும் வாதிடப்பட்டது.

இதை ஏற்று நீதிபதி பிறப்பித்த உத்தரவில்,  காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அப்துல் ரசீத்திடம் போலீசார் வாக்குமூலம் பெறவில்லை.

பிரேத பரிசோதனை தவிர வேறு எந்த மருத்துவ ஆவணங்களும் தாக்கல் செய்யவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

சம்பவம் நடந்து 28 நாட்களுக்கு பிறகே கணவர் உயிரிழந்துள்ளதாகவும், அதற்கு சிகிச்சை குறைபாடு உள்ளிட்ட வேறு பல காரணங்களும் இருந்திருக்கலாம் என்பதால்,

மனைவி ஏற்கனவே அனுபவித்த சிறை தண்டனையே போதுமானது எனக்கூறி கீழமை நீதிமன்றம் விதித்த ஐந்தாண்டுகள் சிறை தண்டனையை குறைத்து தீர்ப்பளித்துள்ளார்.

கலை.ரா

புதுக்கோட்டை சம்பவம்: தமிழக காவல்துறைக்கு சீமான் கேள்வி!

சன்னி லியோன் உதட்டில் காயம்: பதறி வரும் ரசிகர்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share