கோவையில் நடைபெறும் குறும்பட போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுபவர்கள் இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் பணிபுரியலாம் என்று கோவை மாநகர காவல் துறை அறிவித்துள்ளது.
நல்ல சிறப்பான மற்றும் நல்ல கதைக்களம் கொண்ட திரைப்படங்களை சினிமா ரசிகர்கள் வரவேற்கின்றனர். திரைப்படத்தை மட்டுமல்லாது, அந்த படத்தை இயக்கிய இயக்குநர் முதல் எடிட்டர் உள்ளிட்ட அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களையும் பாராட்டுகின்றனர்.
அந்த வகையில் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் ஒரு முக்கிய இடத்தை பிடித்தவர்தான் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
இவர் குறைந்தளவு படங்களை இயக்கியிருக்கலாம், ஆனால் ரசிகர் பட்டாளமோ அதிகம்.
அதிலும் சமீபத்தில் வெளியான விக்ரம் படம் 100 நாட்களைக் கடந்து தற்போது வரை கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனால் பல நடிகர்கள் தாமாக முன்வந்து லோகேஷ் கனகராஜ் உடன் பணிபுரிய ஆர்வம் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் லோகேஷ் கனகராஜோ கதைக்கு ஏற்றவாறு நடிகர்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்கிறார்.
நடிகர்கள் மட்டுமல்ல சினிமா கனவுடைய பலரும் இவருடன் இணைந்து பணிபுரியக் காத்திருக்கிறார்கள். இந்நிலையில் கோவை மாநகர காவல் துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கோவை மாநகர காவல் துறை மற்றும் டெக்ஸிட்டி யுவா இந்தியா என்ற அமைப்பினரும் சேர்ந்து குறும்பட போட்டியை அறிவித்துள்ளனர்.
போதை தடுப்பு விழிப்புணர்வு என்ற தலைப்பில் 3 முதல் 5 நிமிடங்கள் வரை உள்ள குறும்படங்களை அக்டோபர் 20 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

இதில் வெற்றி பெறுபவர்கள் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் உதவி இயக்குநராக பணிபுரியலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த போட்டியில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மட்டும் பங்குபெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு மற்ற மாவட்டத்தைச் சேர்ந்த லோகேஷ் ரசிகர்களுக்குச் சற்று சோகமான விஷயம் தான்.
மோனிஷா
